/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் 54க்கு,17 பணியிடங்கள் காலி
/
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் 54க்கு,17 பணியிடங்கள் காலி
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் 54க்கு,17 பணியிடங்கள் காலி
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் 54க்கு,17 பணியிடங்கள் காலி
ADDED : டிச 23, 2024 11:55 PM
திருத்தணி, திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மொத்தமுள்ள, 54 பணியிடங்களில், 17 பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்துவது மற்றும் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கு, இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இரண்டு பொறியாளர்கள், 6 பணி மேற்பார்வையாளர், 9 துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 10 உதவியாளர்கள், 8 இளநிலை உதவியாளர்கள், ஒரு பதிவேடு அலுவலர், 4 அலுவலக உதவியாளர்கள், 3 ஓட்டுனர்கள், இரண்டு டைப்பிஸ்ட், ஒரு இரவு காவலர் உட்பட மொத்தம், 54 பேர் பணியிடங்கள் உள்ளன.
இதில், 3 உதவியாளர்கள், 4 இளநிலை உதவியாளர்கள், 4 அலுவலக உதவியாளர்கள், 2 ஓட்டுனர்கள்,ஒரு டைப்பிஸ்ட், ஒரு பொறியாளர் என, மொத்தம், 17 பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.
குறிப்பாக, நான்கு அலுவலக உதவியாளர் பணியிடத்தில் ஒருவர் கூட இல்லாமல் வெற்றிடமாக உள்ளன. இதனால் அலுவலகத்தில் இருந்து தபால் மற்றும் சுற்றறிக்கைகள், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்திற்கும், பிற துறை அலுவலகத்திற்கும் சரியான நேரத்தில் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
இதுதவிர, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தபால்கள் மற்றும் அறிக்கைகள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குறித்த நேரத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் காலதாமதம் ஆகிறது. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதுடன், அதிகாரிகளுக்கு பணிச்சுமையும் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம், திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், நான்கு அலுவலக உதவியாளர் பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்
இதுகுறித்து, திருத்தணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஒன்றிய அலுவலகத்தில் காலி பணியிடங்கள் குறித்து ஒவ்வொரு மாதமும், பட்டியல் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிறோம். பணியிடங்கள் நியமனம் செய்வது அரசின் கொள்கை முடிவாகும்' என்றார்.