/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய ரேஷன் கார்டுக்கு 4,500 பேர் விண்ணப்பம்...காத்திருப்பு: அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல்
/
புதிய ரேஷன் கார்டுக்கு 4,500 பேர் விண்ணப்பம்...காத்திருப்பு: அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல்
புதிய ரேஷன் கார்டுக்கு 4,500 பேர் விண்ணப்பம்...காத்திருப்பு: அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல்
புதிய ரேஷன் கார்டுக்கு 4,500 பேர் விண்ணப்பம்...காத்திருப்பு: அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல்
ADDED : மே 22, 2025 10:17 PM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாவில் 4,500 பேர் புதிய ரேஷன் கார்டு வழங்க கோரி விண்ணப்பித்து, ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். இதுவரை கார்டு கிடைக்காததால், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுத்து புதிய ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்பது தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின் மூலம் புதிய ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம், புகைப்படம் மாற்றம் மற்றும் நகல் கார்டுகள் பெறுதல் போன்ற பணி செய்து தரப்படுகிறது.
மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்க கோரி ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கப் படுகிறது.
15 நாட்கள்
இவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த தாலுகாவில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து வருவாய் ஆய்வாளர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின், தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு, 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.
கடந்தாண்டு டிசம்பர் வரை விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
ஜனவரி மாதம் முதல் இதுவரை விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கவில்லை. ரேஷன் கார்டு கிடைக்காததால் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு வருமானம், இருப்பிடம் மற்றும் சாதி சான்றுகள் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ரேஷன் கார்டு இல்லாததால், இலவச கல்வி திட்டத்தில் பள்ளியில் சேர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, ஜனவரி மாதம் முதல் ஒன்பது தாலுகாவில் 4,500 பேர் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே போல் கார்டு தொலைத்தவர்கள் நகல் கார்டு கோரி, 900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இதுவரை ரேஷன் கார்டு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
ஸ்மார்ட் கார்டு
இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்தவர்களிடம் அந்தந்த தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் விசாரணை நடத்தி தகுதியானவர்கள் என பட்டியல் தயாரித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் அலுவலகத்திலேயே புதிய ரேஷன் கார்டு - ஸ்மார்ட் கார்டு அச்சடித்து அந்த தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பர்.
ஆனால் ஜனவரி மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்பவர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் தயார் செய்து, அவர்கள் அனுப்பும் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று அந்தந்த வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் விசாரணை நடத்த வேண்டும்.
இதனால் விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியல் எங்களுக்கு அனுப்புவது காலதாமதம் ஆகிறது. அதன்பின் விசாரணை நடத்தி, மீண்டும் விண்ணப்பங்களை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளன.
இதனால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.