/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்துடைப்பாக வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் திரை காற்றில் கலக்கும் மாசு அளவை கண்டறிவதில் சிக்கல்
/
கண்துடைப்பாக வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் திரை காற்றில் கலக்கும் மாசு அளவை கண்டறிவதில் சிக்கல்
கண்துடைப்பாக வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் திரை காற்றில் கலக்கும் மாசு அளவை கண்டறிவதில் சிக்கல்
கண்துடைப்பாக வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் திரை காற்றில் கலக்கும் மாசு அளவை கண்டறிவதில் சிக்கல்
ADDED : ஜன 19, 2025 02:43 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி தொழிற்சாலைகளால் காற்றின் தரம் வெகுவாக பாதித்து வரும் நிலையில், காற்றில் கலக்கும் மாசு அளவினை காண்பிக்கும் எலக்ட்ரானிக் திரை கண்துடைப்புக்கு வைக்கப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உற்பத்தி வகை தொழிற்சாலைகளாகும்.
சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழிற்சாலைகள், மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும்.
மாறாக, பல தொழிற்சாலைகள் விதிமுறைகள் மீறி இயக்கப்படுவதால், காற்று, நீர், நிலத்தின் தரம் வெகுவாக குறைந்து சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் புகாரை முன் வைத்து வருகின்றனர்.
அதை உறுதி செய்யும் விதமாக, 2016ல், சட்டசபையில், அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சர் கருப்பண்ணன் கூறுகையில், தமிழகத்தில், கும்மிடிப்பூண்டியை தவிர மற்ற அனைத்து பகுதியிலும் காற்றின் தரம் கட்டுப்பாட்டில் உள்ளது' என தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த ஆண்டே, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஏற்றுமதி வளர்ச்சி தொழிற்பூங்கா அலுவலகத்தில், காற்றில் கலக்கும் மாசுவின் அளவை தொடர்ந்து கண்காணிக்கும் நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. காற்றின் தரத்தை ஒழிவு மறைவு இன்றி, பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த கட்டடத்தின் முகப்பில், மெகா எலக்ட்ரானிக் திரை வைக்கப்பட்டிருந்தது.
அதன் வாயிலாக, சுற்றுப்புற காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு உள்ளிட்ட வேதிப் பொருட்களின் அளவீடுகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ள முடிந்தது.
சில ஆண்டுகளில் அந்த எலக்ட்ரானிக் திரை, பழுதாகி கிடப்பில் போடப்பட்டது. தொடர் புகாரின்படி, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தின் மீது சிறிய அளவிலான எலக்ட்ரானிக் திரை வைக்கப்பட்டது.
ஒதுக்குபுறாக உள்ள அந்த அலுவலகத்தில், உயரமான இடத்தில், சிறிய அளவிலான எலக்ட்ரானிக் திரை வைத்திருப்பதால், காற்றில் உள்ள மாசு அளவீடுகளை தெரிந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், காற்றில் கலக்கும் மாசுவின் அளவு மறைக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர், சுரேஷ்பாபு கூறியதாவது:
முறையான கண்காணிப்பு இன்றி கும்மிடிப்பூண்டி பகுதியின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. காற்றின் தரத்தை முழுமையாக தெரிந்துக் கொள்ள, சிப்காட் வளாகத்தை சுற்றிலும் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்டறியும் நிலையங்களை நிறுவ வேண்டும்.
காற்றில் கலக்கும் மாசுவின் அளவை மக்களும் தெரிந்துக் கொள்ளும் விதமாக சிப்காட் நுழைவாயிலில் மெகா எலக்ட்ரானிக் திரை வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சுற்றுச்சூழல் அலுவலர் ஒருவர் கூறுகையில், தொடர்ந்து கண்காணிக்கும் நிலையங்கள் அமைப்பதில், பல கோடி ரூபாய் செலவாகும்.
இருப்பினும், மக்கள் வசிக்கும் கிராம பகுதிகளில், எட்டு இடங்களை தேர்வு செய்து, சில தினங்கள் மட்டும் நடமாடும் கருவிகள் பொருத்தி காற்றின் தரம் கண்டறிய திட்டமிட்டுள்ளோம். விரைவில் செயல்படுத்தி, விதிகள் மீறும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.