/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதை
/
சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதை
சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதை
சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதை
ADDED : அக் 14, 2024 03:23 AM

ஆவடி,:ஆவடி கவரைப்பாளையம் முதல் பட்டாபிராம் இந்து கல்லுாரி ரயில் நிலையம் வரை, 1 கி.மீ., துாரத்திற்கு பழக்கடைகள், காய்கறி கடைகள், இளநீர் கடைகள், டிபன் கடைகள் என, 60க்கும் மேற்பட்ட கடைகளால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, கவரப்பாளையம் டி.ஆர்.ஆர்., நகர் அருகே, 10க்கும் மேற்பட்ட கார்கள் அத்துமீறி அனுமதியின்றி நிறுத்தப்படுகின்றன.
அதேபோல், அதன் அருகே ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் ஒருவர், சாலையோரத்தில் அனுமதியின்றி 'ஆஸ்பெடாஸ் ஷீட்'கள் அடுக்கி வைத்துள்ளார்.
இது குறித்து பல புகார்கள் சென்றதை அடுத்து, கடந்த மார்ச் 8ம் தேதி,'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன் சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.
அதன் பின், சில நாட்களில் மீண்டும் அங்கு சாலையோர கடைகள் முளைத்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாக நான்கு மாதங்கள் ஆகியும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளனர்.
ஆவடியில், சாலையோர கடைகளை முழுமையாக அகற்ற, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
ஆனால், சாலையோர வியாபாரிகளுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு இருப்பதால், அவர்களின் 'அழுத்தம்' காரணமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கடந்த 5ம் தேதி, ஆவடி நேரு பஜாரில், மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர கடைகளை அகற்ற சென்றனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவர், ஆவடி மாநகராட்சி கமிஷனரை அச்சுறுத்தும் விதமாக, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என தெரியாமல், விழிபிதுங்கி நிற்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாகி வருகிறது.