/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடி பேருந்து நிலையம் ரூ.36 கோடியில் நவீனமயம்!
/
ஆவடி பேருந்து நிலையம் ரூ.36 கோடியில் நவீனமயம்!
UPDATED : ஜூலை 08, 2025 07:16 AM
ADDED : ஜூலை 07, 2025 11:23 PM

சென்னை: ஆவடி பேருந்து நிலையம், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படுகிறது.
சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பக்தவத்சலபுரம் பகுதியில் 1.93 ஏக்கர் பரப்பளவில் ஆவடி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, கோயம்பேடு, திருவான்மியூர், செங்குன்றம், தாம்பரம்,திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தவிர, செங்கோட்டை, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், 55 வழித்தடங்களில் 221 பேருந்துகள் 1,274 நடை இயக்கப்பட்டு வருகின்றன. தினமும், 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்து வருகின்றனர். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆவடி பேருந்து நிலையம், முறையான பராமரிப்பின்றி படுமோசமாக இருந்தது.
பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு தளங்கள், வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, கடந்த மாதம் துவங்கியது.
இதில், ஒரே நேரத்தில் 22 பேருந்துகள் நிற்கும் தடம், ஐந்து நடைமேடைகள், 435 இருசக்கர வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி, பாலுாட்டும் அறை, மின் துாக்கி, 200 பேர் அமர காத்திருப்பு கூடம், ஆர்.ஓ., பிளான்ட், 22,000 சதுர அடியில் வணிக பகுதி, 10,602 சதுர அடியில் நிர்வாக கட்டடம், நவீன கழிப்பறை வசதிகள் அமைய உள்ளன.
ஆவடியில், விரைவில் மெட்ரோ ரயில் நிலையம் வர இருப்பதால், ஆவடி பேருந்து நிலையம், மெட்ரோ மற்றும் ஆவடி ரயில் நிலையம் என, மூன்று பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இது, ஆவடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பஸ் நிலையம் மேம்படுத்தும் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- சடகோபன், 65,
சமூக ஆர்வலர், பட்டாபிராம்.

