/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திட்டமிடலின்றி கட்டப்பட்ட ஆவடி சார் - பதிவாளர் ஆபீஸ்
/
திட்டமிடலின்றி கட்டப்பட்ட ஆவடி சார் - பதிவாளர் ஆபீஸ்
திட்டமிடலின்றி கட்டப்பட்ட ஆவடி சார் - பதிவாளர் ஆபீஸ்
திட்டமிடலின்றி கட்டப்பட்ட ஆவடி சார் - பதிவாளர் ஆபீஸ்
ADDED : நவ 04, 2024 02:19 AM

ஆவடி:ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஆவடி மாநகராட்சி பகுதிகள், பூந்தமல்லி, வில்லிவாக்கம் மற்றும் திருநின்றவூர் உட்பட 33 கிராம பகுதிகளின் பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2019ல் சொந்த கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஆவடி பருத்திப்பட்டு, ஐயங்குளம், ஆவடி வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் டவுன் சர்வே எண்: 57/2 ல், 821 சதுர மீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டது. 1.68 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்தாண்டு பணிகள் துவக்கப்பட்டன.
குற்றச்சாட்டு
தரைத்தளம் மற்றும் முதல் தளம் முறையே 1,625 சதுர அடி உள்ளது. இதில் தரைத்தளத்தில் பார்வையாளர்கள் அமரும் அறை, கணினி அறை, இ - ஸ்டாம்பிங், சார் - பதிவாளர் அறை மற்றும் கழிப்பறைகள் உள்ளன.
முதல் தளத்தில் ரெகார்ட் ரூம், ஸ்டோர் ரூம், உணவு அருந்தும் அறை மற்றும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட இடம் முறையாக அளவீடு செய்யாதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணிகள் துவங்கியதில் இருந்து பல எதிர்ப்புகள் கிளம்பின.
குறிப்பாக, திட்டமிடலின்றி வரைபடம் தயாரித்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு
நுழைவாயில் அமைந்துள்ள பகுதியில், 5 அடி இடைவெளியில் வட்டார போக்குவரத்து அலுவலக சுற்றுச்சுவர் அமைந்துள்ளது.
இதனால், காற்றோட்டம், இடநெருக்கடி மற்றும் போதிய வெளிச்சம் இன்மையால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என பொதுமக்கள் அலுவலகத்திற்கு எப்படி வந்து செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவசர காலத்தில், பாதுகாப்பாக வெளியேற எந்த வழிமுறையும் கட்டடத்தில் ஏற்படுத்தவில்லை. மேற்கு நோக்கி நுழைவாயில் அமைந்துள்ள இடத்தில், 20 அடி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, சார் - பதிவாளர்அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 821 சதுர மீட்டர் இடத்தை, மீண்டும் முறையாக அளவீடு செய்து, உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
விசாரணை அவசியம்
தினமும் 1,000 பேர் வந்து செல்லும் அரசு அலுவலகத்திற்கு, எந்த முன் அனுபவம் இல்லாத நபர் வாயிலாக வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, வரைபடம் தயாரித்தவர் மற்றும் கட்டட அனுமதி வழங்கியவர் மீது முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
- தரணிதரன், 62,
சமூக ஆர்வலர், ஆவடி