/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள் அராஜகம்!
/
அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள் அராஜகம்!
ADDED : மார் 05, 2024 06:41 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்துார், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, புழல், ஆர்.கே.பேட்டை, சோழவரம், திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர், வில்லிவாக்கம் என 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
இந்த 526 ஊராட்சிகளிலும் அனுமதியின்றி செங்கல் சூளை இயங்குவது தற்போது அதிகரித்து வருகிறது. இவ்வாறு செங்கல் சூளைகள் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மூலம், ஒன்றிய நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
ஆனால் செங்கல் சூளை நடத்துவோர் முறையான அனுமதி பெறாமல் நடத்தி வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்றடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது என்ற விதி இருந்தும் செங்கல் சூளை நடத்துவோர் பின்பற்றுவதில்லை.
இதேபோல் ஊராட்சி பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
அனுமதி பெறுவது எப்படி
ஊராட்சி பகுதிகளில் பட்டா நிலங்களில் செங்கல் சூளை நடத்துவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்று ஒன்றிய நிர்வாகத்திடம் அனுமதிக்கக்கோரி மனு அளிக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக 1 லட்சம் முதல் 2.5 லட்சம் செங்கல் தயாரிப்பு வரை 2,000 ரூபாயும், இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் வரை 2,500 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மேலும் குடியிருப்புகள், பள்ளி மற்றும் பொது இடங்களுக்கு அருகில் மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலையோரம் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் என்ற விதிகளின் படி செங்கல் சூளை நடத்த வேண்டும்.
ஆனால் ஊராட்சி பகுதிகளில் இவ்வாறு செங்கல் சூளை நடத்துவோர் பெரும்பாலும் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் மணலை எவ்வித அனுமதியுமின்றி எடுத்து சாலையோரம் உள்ள வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளில் செங்கல் சூளை நடத்துகின்றனர்.
இதனால் ஏற்படும் புகையால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருவதோடு சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இதேபோல் தனியார் வீட்டு மனை நிலங்களிலும் அனுமதியின்றி செங்கல் சூளை இயங்கி வருவது தற்போது அதிகரித்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வாறு அனுமதியின்றி நடந்து வரும் செங்கல் சூளைகளை ஆய்வு செய்து அரசுக்கு வருவாய் தரும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டம் முழுதும் ஏரி, குளம், குட்டை போன்ற பட்டா நிலங்களில் அனுமதி மற்றும் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் செங்கல் சூளைகள் குறித்து அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அளிக்கும் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

