ADDED : டிச 31, 2024 01:09 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம், ஜன., 3ம் தேதி துவங்குகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கோமாரி நோய் வாயிலாக கால்நடைகள் இழப்பு மற்றும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. பால் உற்பத்தி குறைதல், மலட்டுத்தன்மை, கருச் சிதைவு, எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக பரவுகிறது.
எனவே, திருவள்ளுர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் ஜன., 3ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் நடக்கிறது.
கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசு, எருது, எருமை மற்றும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்று குட்டி ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.