ADDED : பிப் 03, 2025 02:11 AM

திருத்தணி:கால்நடை துறையின் வாயிலாக ஆண்டுதோறும் பிப்.1ம் தேதி முதல், பிப்.14ம் தேதி வரை, இரண்டு வாரத்திற்கு கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
விவசாயிகள் வளர்க்கும் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தாக்கினால் கோழிகளுக்கு சோர்வு, காய்ச்சல், கால்கள் நடுக்கும், பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் கழிச்சல், சில நேரங்களில் கோழிகள் அதிகளவில் இறக்கின்றன.
இதை தடுக்கும் வகையில், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கோழி கழிச்சல் தடுப்பு ஊசி போடும் நேற்று முன்தினம் திருத்தணி வருவாய் கோட்டத்தில், கால்நடை துறையின் வாயிலாக துவங்கப்பட்டது.
இது குறித்து, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:
திருத்தணி கோட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில், கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் நலன் கருதி கோழி கழிச்சல் தடுப்பூசி, நேற்றுமுன்தினம் துவங்கி, வரும், 14ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது.
அந்தந்த கால்நடை மருந்தகத்தில் இருந்து, உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் ஆகியோர் அனைத்து கிராமங்களுக்கு நேரில் சென்று கோழிகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இதற்காக 71,400 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

