/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமான குளிர்பானம் வழங்க வணிகருக்கு அறிவுரை: கலெக்டர்
/
தரமான குளிர்பானம் வழங்க வணிகருக்கு அறிவுரை: கலெக்டர்
தரமான குளிர்பானம் வழங்க வணிகருக்கு அறிவுரை: கலெக்டர்
தரமான குளிர்பானம் வழங்க வணிகருக்கு அறிவுரை: கலெக்டர்
ADDED : ஏப் 05, 2025 10:17 PM
திருவள்ளூர்:குளிர்பான வியாபாரிகள் பொதுமக்களுக்கு தரமான குளிர்பானம் வழங்க வேண்டும். தரமற்ற குளிர்பானம் வழங்கினால், பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என, கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவள்ளுர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோடைக்காலம் துவங்கிய நிலையில், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க பல்வேறு விதமான குளிர்பானம் மற்றும் பழச்சாறு அருந்தி வருகின்றனர். சாலையோர கடைகள் மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானம், பழச்சாறுகள் வழங்க வேண்டும்.
அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-ன் படி, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவையாக இருக்க வேண்டும்.
அவைகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் செயற்கை வண்ணங்களை சேர்க்க கூடாது. பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், அழுகிய பழங்களையும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்த கூடாது.
ஐஸ் கட்டிகளை பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும். பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்திலும். 94440 42322 என்ற 'வாட்ஸாப்' எண்ணிற்கும், unavupukar@gmail.com என்ற இ-மெயில் மற்றும் 'TN foodsafety consumer App' என்ற மொபைல் செயலியிலும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

