UPDATED : மார் 17, 2025 01:25 AM
ADDED : மார் 16, 2025 09:30 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு,
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 27ல் ஏலம் விடப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காவல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மதுவிலக்கு
அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில், மதுவிலக்கு வழக்குகளில்
சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட, 31 வாகனங்களை ஏலம் விட, மாவட்ட
எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, இருசக்கர
வாகனங்கள் 23, மூன்று சக்கர வாகனங்கள் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் ஆறு
என, மொத்தம் 31 வாகனங்கள் வரும் 27ம் தேதி காலை 10:00 மணிக்கு,
திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை
வாங்க வருவோர், முன்வைப்பு கட்டண தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு 1,000
ரூபாய், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு, 5,000 ரூபாய் செலுத்தி,
'டோக்கன்' பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான, 'டோக்கன்' காலை 8:00 - 10:00
மணி வரை வழங்கப்படும்.
ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன்,
இருசக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவீதம், மூன்று மற்றும் நான்கு
சக்கர வாகனத்திற்கு, 18 சதவீதம் உடனடியாக செலுத்த வேண்டும்.
வாகனத்தின்
விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை,
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில்
ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் வாகனத்தின் உரிமையாளர்கள்,
அதற்கான பதிவுச்சான்று, ஆதார் கார்டு கொண்டுவர வேண்டும். பொது ஏலத்தில்
பங்கேற்போர் ஆதார் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு
அடையாள அட்டை தவறாமல் கொண்டுவர வேண்டும்.
ஏலத்தில் பங்கேற்று, வாகனம் எடுக்காதவர்களுக்கு முன்வைப்பு கட்டண தொகை, ஏலத்தின் முடிவில் திருப்பிவிட்டு தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.