ADDED : பிப் 06, 2024 10:41 PM

பழவேற்காடு:ஆழ்கடல் பகுதியில் உள்ள அரியவகை ஆமைகள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிடுவது வழக்கமாகும்.
பழவேற்காடு கடற்கரை பகுதியிலும் கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் வந்து செல்வது உண்டு. அவ்வாறு அவை கடற்கரை பகுதியை நோக்கி நகரும்போது, மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.
பின், அவை இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. நேற்று முன்தினம், பழவேற்காடு, வைரவன்குப்பம் கிராமத்தின் கடற்கரை பகுதியில், 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. அவற்றை கைப்பற்றி உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:
மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டைமடி வலைகளில் தான், கடல் ஆமைகள் மற்றும் டால்பின்கள் சிக்கி இறக்கின்றன. இரட்டைமடி வலைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தடையை மீறி, வெளிமாநிலங்களில் இருந்து விசைப்படகுகளில் வரும் மீனவர்கள் இவற்றை, பயன்படுத்துகின்றனர்.
மேலும், விசைப்படகுகள் கடற்கரையில் இருந்து, 12 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க வேண்டும். அதுபோன்ற நேரங்களில் கடற்கரை நோக்கி நகரும் கடல் ஆமைகள், இரட்டைமடி வலைகளில் அதன் தலைகள் சிக்கி வெளியேற முடியாமல், மூச்சுத்திணறி இறக்கின்றன. கடல் ஆமைகள் இறப்பது தொடர்கதையாக இருப்பதால், விசைப்படகு மீனவர்களுக்கு உரிய அறிவுத்தல்களை வழங்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர காவல் படையினர் அவ்வப்போது ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டு, கடல் ஆமைகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

