/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை துவக்காத 1,465 பயனாளிகள் நீக்கம் விடுவிக்கப்பட்ட தொகையை வசூலிக்க முடிவு
/
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை துவக்காத 1,465 பயனாளிகள் நீக்கம் விடுவிக்கப்பட்ட தொகையை வசூலிக்க முடிவு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை துவக்காத 1,465 பயனாளிகள் நீக்கம் விடுவிக்கப்பட்ட தொகையை வசூலிக்க முடிவு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை துவக்காத 1,465 பயனாளிகள் நீக்கம் விடுவிக்கப்பட்ட தொகையை வசூலிக்க முடிவு
ADDED : ஜூலை 02, 2025 02:38 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட முடியாத 1,465 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, விடுவிக்கப்பட்ட தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில், ஊரக வளர்ச்சி துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் அமைந்துள்ளன. ஊரக பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்போருக்கு, 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' எனப்படும், பிரதமர் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனுமதி
சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு, வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு பட்டியல் 2011ன் படி, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கப்படுகிறது.
கடந்த 2016 -- 17ம் நிதியாண்டு முதல், 2021 -- 22ம் நிதியாண்டு வரையில், 'பிரதமர் ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், 19,695 பேருக்கு வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வீடு கட்டும் பயனாளிகளும், தலா 2.40 லட்சம் ரூபாய் செலவில், கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ளலாம்.
இதில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு, 100 நாள் வேலை செய்து கொள்ளலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இதுதவிர, துாய்மை பாரத இயக்கத்தில், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு, 12,000 ரூபாய் அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்து கொடுக்கிறது.
இதுபோன்ற சலுகைகள் இருந்தும், திருவள்ளூர் மாவட்டத்தில், 1,658 பேர் வீடு கட்டி முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். ஊரக வளர்ச்சி துறை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்களின் களஆய்வு மூலமாக, இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் நேரில் சந்தித்து, விரைந்து வீடு கட்டும் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதில், 223 பேர் மட்டும், வீடு கட்ட முன் வந்துள்ளனர். அதில், 11 பேர் வீடு கட்டும் பணியை துவக்கியுள்ளனர்.
பணியாணை ரத்து
மீதமுள்ள, 1,465 பேர் வீடு கட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட, வீடு கட்டும் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. வீடு கட்ட முடியாத பயனாளிகளிடம் இருந்து, அரசு பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்திய பணம் திரும்ப பெறுவதற்கு ஊரக வளர்ச்சி துறை முனைப்பு காட்டி வருகிறது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் கூறியதாவது:
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பணியானை பெற்றவர்களில், 1,465 பயனாளிகள் இதுவரை வீடு கட்டி முடிக்கவில்லை. பலமுறை அறிவுறுத்தியும், வீடுகளை கட்டாமல் உள்ளனர். எனவே, அவர்களை தகுதியற்ற பயனாளிகளாக அறிவித்து, பணியானை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது.
தவணை தொகை
இதுகுறித்த கருத்துருவும், ஊரக வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், பயனாளிகளுக்கு இதுவரை அரசு விடுவிக்கப்பட்ட தவணை தொகையை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள், அந்த பணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக, ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.