/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராமங்களில் வினியோகிக்கப்படும் குடிநீரை...பரிசோதிக்கணும்!: டைபாய்டு, வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதி
/
கிராமங்களில் வினியோகிக்கப்படும் குடிநீரை...பரிசோதிக்கணும்!: டைபாய்டு, வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதி
கிராமங்களில் வினியோகிக்கப்படும் குடிநீரை...பரிசோதிக்கணும்!: டைபாய்டு, வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதி
கிராமங்களில் வினியோகிக்கப்படும் குடிநீரை...பரிசோதிக்கணும்!: டைபாய்டு, வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதி
ADDED : ஏப் 13, 2025 09:01 PM
திருவாலங்காடு:குடிநீர் தரத்தை பரிசோதிக்காமல் வினியோகிப்பதால் டைபாய்டு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு கிராமவாசிகள் ஆளாகி வருகின்றனர். களநீர் பரிசோதனை பெட்டி வைத்து பரிசோதித்த பின், குடிநீர் வினியோகிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, வில்லிவாக்கம், எல்லாபுரம், உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்டு 526 ஊராட்சிகளில், 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வில்லிவாக்கம், புழல், வடசென்னையை ஒட்டிய மாவட்ட பகுதிகளுக்கு பூண்டி, தேர்வாய்கண்டிகை, புழல், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட ஏரி மற்றும் அணையை ஆதாரமாக கொண்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பற்றாக்குறை ஏற்படும் போது, உள்ளூர் நீராதாரங்களான போர்வெல், கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீரும் கலந்து, குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. மேலும், தரைமட்ட மற்றும் சிறிய தொட்டிகள் வாயிலாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட மேற்கு பகுதிகளான திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ,பெரும்பாலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேல்நிலை தொட்டிகளை முறையாக பராமரிக்காதது, இரு வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை கலப்பது, பிரதான குழாய் உடைப்பு வழியாக கழிவு நீர் உட்செல்வது உள்ளிட்ட காரணங்களால், குடிநீரின் தரம் பாதிக்கிறது.
இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத நிலையில், தரமற்ற குடிநீரால் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரை சம்பந்தப்பட்ட பகுதியிலேயே ஊராட்சி நிர்வாகத்தினர் பரிசோதிக்க பயிற்சி கொடுக்கப்பட்டது. இதற்காக, களநீர் பரிசோதனை பெட்டியும் வழங்கப்பட்டது.
இப்பெட்டி வாயிலாக தண்ணீரின் காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, புளூரைடு, இரும்பு உப்பு, அம்மோனியா, நைட்ரேட், பாஸ்பேட் மற்றும் குளோரின் ஆகியவற்றை பரிசோதிக்கலாம்.
ஆனால், களநீர் பரிசோதனை பெட்டியை பயன்படுத்தி, ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீரின் தரத்தை கண்டறிவதில்லை. இத்திட்டத்தையும் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
மழை பெய்த பின், உள்ளூர் நீராதாரங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரின் தன்மையில் மாற்றம் ஏற்படும். இந்த தண்ணீரை பரிசோதிக்காமல் வினியோகிப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையுள்ளது.
எனவே, குடிநீரை குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதித்து வினியோகிக்க, குடிநீர் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

