/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துாரில் கிடப்பில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பணி 60 கிராம விவசாயிகள் தவிப்பு
/
கடம்பத்துாரில் கிடப்பில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பணி 60 கிராம விவசாயிகள் தவிப்பு
கடம்பத்துாரில் கிடப்பில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பணி 60 கிராம விவசாயிகள் தவிப்பு
கடம்பத்துாரில் கிடப்பில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பணி 60 கிராம விவசாயிகள் தவிப்பு
ADDED : ஆக 04, 2025 03:10 AM

கடம்பத்துார்:கடம்பத்துாரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய அலுவலகம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், சுற்றியுள்ள 60 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தின் கட்டுப்பாட்டில், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகம் மற்றும் கிடங்கு செயல்பட்டு வந்தது.
கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள 60 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இந்த மையத்திற்கு சென்று, விவசாயம் குறித்த சந்தேகங்கள், அரசின் சலுகைகள் குறித்த விபரங்களை கேட்டு, பயனடைந்து வந்தனர்.
இந்த அலுவலம் மிகவும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் புதிதாக, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், அலுவலகம் மற்றும் கிடங்கு கட்டுமான பணிகள், ஆறு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன.
இதையடுத்து, வேளாண் துறை அலுவலகம் பேரம்பாக்கத்திற்கும், தோட்டக்கலைத்துறை அலுவலகம் கடம்பத்துாருக்கும் மாற்றப்பட்டு, வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், அலுவலக கட்டுமான பணிகள், ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதனால், விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கடம்பத்துாரில் நடந்து வரும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறைக்கான புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

