/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் அடையாள எண் பெற வரும் 30க்குள் பதிவு செய்ய அழைப்பு
/
விவசாயிகள் அடையாள எண் பெற வரும் 30க்குள் பதிவு செய்ய அழைப்பு
விவசாயிகள் அடையாள எண் பெற வரும் 30க்குள் பதிவு செய்ய அழைப்பு
விவசாயிகள் அடையாள எண் பெற வரும் 30க்குள் பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஜூன் 23, 2025 11:10 PM
திருவள்ளூர், விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவியை பெறுவதற்கான, தனித்துவ அடையாள எண் பெற, நில உடைமை விபரத்தை, வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடைமை விபரம், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க, தமிழகத்தில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார், மொபைல் எண், நில உடைமை விபரங்களை இணைக்கும் பணி, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், பொது சேவை மையத்திலும், தங்களின் விபரத்தை விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
நடப்பு 2025 - -26ம் நிதியாண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட மத்திய - மாநில அரசின் திட்டங்களில், விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண் - உழவர் நலத் துறையினரால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மற்றும் பொது சேவை மையங்களுக்கு சென்று, வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.