/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிதி நிறுவன அதிகாரி மர்ம மரணம்
/
போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிதி நிறுவன அதிகாரி மர்ம மரணம்
போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிதி நிறுவன அதிகாரி மர்ம மரணம்
போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிதி நிறுவன அதிகாரி மர்ம மரணம்
ADDED : செப் 30, 2025 01:05 AM

செம்பியம்:வாகன சோதனையின்போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிதி நிறுவன அதிகாரி, மர்மமான முறையில் இறந்தார்.
கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் கரம்சந்த் காமராஜ், 50. இவர் தி.நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கடன் பிரிவு மண்டல தலைவராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு, 'கியா காரன்ஸ்' காரில், மாதவரம் நெடுஞ்சாலை வழியாக, தன் வீட்டிற்கு நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சிங்கப்பூர் ஷாப்பிங் நிறுவனம் எதிரே, செம்பியம் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
காமராஜின் காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார், அவர் மது அருந்தி உள்ளாரா என சோதனை செய்தனர்.
பரிசோதனைக் கருவியில், மது அருந்தியதாக காட்டியதால், காரை விட்டு இறங்குமாறு கூறிய போலீசார், அபராதம் விதிக்க முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், காமராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென, போலீசார் கீழே தள்ளியதாகவும், அந்த அதிர்ச்சியில் காமராஜ் மயக்க நிலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த போலீசார், காமராஜின் மொபைல் போன் வாயிலாக, அவரது மகன் குருசரண் ராஜ், 21, என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த குரு சரண்ராஜ், ஆம்புலன்சை வரவழைத்தார். ஆம்புலன்ஸில் வந்தவர்கள் பரிசோதித்துவிட்டு, காமராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கிருந்த மருத்துவர்களும் காமராஜ் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
செம்பியம் போலீசார், காமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, 'போலீசாருக்கும், காமராஜுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த போலீசார், காமராஜை தாக்கி கீழே தள்ளினர். நான் பார்த்தேன்' என, துாய்மை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.