/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல் அரிப்பால் பழவேற்காடு மீனவர்கள்...அச்சம்: துாண்டில் வளைவு அமைக்க எதிர்பார்ப்பு
/
கடல் அரிப்பால் பழவேற்காடு மீனவர்கள்...அச்சம்: துாண்டில் வளைவு அமைக்க எதிர்பார்ப்பு
கடல் அரிப்பால் பழவேற்காடு மீனவர்கள்...அச்சம்: துாண்டில் வளைவு அமைக்க எதிர்பார்ப்பு
கடல் அரிப்பால் பழவேற்காடு மீனவர்கள்...அச்சம்: துாண்டில் வளைவு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 24, 2024 12:57 AM

பழவேற்காடு:பழவேற்காடில் கடல் அரிப்பு அதிகரித்து, கடலுக்கும், கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்த நிலையில், கடற்கரையோர மீனவ கிராமங்கள் அச்சத்திற்கு ஆளாகி வருகிறது. இதனால் துாண்டில் வளைவுகள் அமைத்து கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப்பகுதியில், 35 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், கூனங்குப்பம் கிராமத்தில் துவங்கி, திருமலைநகர், லைட்அவுஸ்நடுகுப்பம், அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரைகுப்பம், காளஞ்சி, கரிமணல் ஆகிய கிராமங்கள் கடற்கரை பகுதியின் அருகே அமைந்து உள்ளன.
வழக்கமாக புயல் காலங்களில் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். அச்சமயங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரைக்கும், மீனவ கிராமங்களுக்கு இடையேயான இடைவெளி குறுகும். கடல் நீர், குடியிருப்பு வரை பரவும். இதனால் மீனவர்களின் படகு மற்றும் வலைகள் சேதம் அடையும்.
இந்நிலையில், சமீப காலமாக புயல் அல்லாத நேரங்களிலும், கடல் அரிப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது மேற்கண்ட மீனவ கிராமங்களின் அருகில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக கடற்கரை பகுதிகளில், ஐந்து அடி ஆழத்திற்கு கடற்கரை மணல் கடலில் அடித்து செல்லப்பட்டு உள்ளன.
கூனங்குப்பம் தொடங்கி, கோரைகுப்பம் வரை இதே நிலை இருப்பதால் மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால், புயல், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், மீனவ கிராமங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை எண்ணுார் துவங்கி, சென்னை துறைமுகம் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் இதுபோன்ற கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, நட்சத்திர கற்களை பதித்து ஆங்காங்கே துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால், கடல் அலைகளின் தாக்கம் குறைந்து உள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்போது, நட்சத்திர கற்கள் மீது அலைகள் மோதி மண் அரிப்பை தடுக்கிறது.
அது போன்று பழவேற்காடில், கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வரும், கடற்கரை கிராமங்களின் அருகில், நட்சித்திர கற்கள், பாறைகள் போட்டு துாண்டில் வளைவுகள் அமைக்கவும், மீனவ மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திடவும் வேண்டும் என அவர்கள் எதிபார்க்கின்றனர்.
இது குறித்து பழவேற்காடு பகுதி சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
கடல் அரிப்பு அதிகரிப்பதால் கடற்கரைக்கும், குடியிருப்புகளுக்குமான இடைவெளி நாளுக்குநாள் குறைந்து வருகிறது. மேலும், கடல் அரிப்பு அதிகரிப்பதால், நிலப்பரபில் உப்பு நீர் உட்புகுந்து, குடிநீர் ஆதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். வேறு இடங்களுக்கு குடிபெயரும் நிலை உருவாகும். இதனால் அச்சத்துடன் இருந்து வருகிறோம்.
கடற்கரை துாண்டில் வளைவுகள் அமைத்து கடல் அரிப்பை தடுக்க வேண்டும். துாண்டில் வளைவுகள் அமைப்பதால், கடற்கரை பகுதிகளில் புதிய மணல் திட்டுக்கள் உருவாகும்.
இதனால் மீனவர்களின் குடியிருப்பு பகுதிகள், படகு மற்றும் வலைகள் ஆகியவை பாதுகாக்கப்படும். அரசு அதிகாரிகள், பழவேற்காடு கடற்கரையோர கிராமங்களில் ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.