/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபர் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு குண்டாஸ்
/
வாலிபர் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு குண்டாஸ்
ADDED : ஜூலை 16, 2025 09:42 PM
திருவள்ளூர்:நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ், 25. இவர் வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் போடும் வேலை செய்து வந்தார்.
கடந்த மாதம் 25ம் தேதி இரவு முகேஷ் அதே பகுதியை சேர்ந்த தன் நண்பர்களான தீபன், ஜாவித் ஆகியோருடன் பேரம்பாக்கம் பழைய தரைப்பாலம் அருகே பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பேரம்பாக்கம் ஆகாஷ், 19, சஞ்சய், 19 மற்றும் இருளஞ்சேரி தருண், 19, சின்னமண்டலி மணிஷ், 19, குமாரச்சேரி வசந்தகுமார், 23 உட்பட 7 பேர் முன்விரோதம் காரணமாக முகேஷ், தீபன் ஆகியோர் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஜாவித்தை கத்தியால் தலையில் வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த மூவரையும் அப்பகுதிவாசிகள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முகேஷ் உயிரிழந்தார். தீபன், ஜாவித் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் ஆகாஷ், தருண், மணீஷ், வசந்தகுமார், சஞ்சய் உட்பட ஏழு பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆகாஷ், தருண், மணிஷ், வசந்தகுமார், சஞ்சய் ஆகிய ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பிரதாப் ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த ஆணையை போலீசார் சென்னை புழல் சிறை அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் வழங்கினர்.