/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதியவர் பென்ஷன் உள்ளிட்ட உதவித்தொகை வழங்க... நிதி பற்றாக்குறை: 8,500 பயனாளிகள் ஒன்றரை ஆண்டாக காத்திருப்பு
/
முதியவர் பென்ஷன் உள்ளிட்ட உதவித்தொகை வழங்க... நிதி பற்றாக்குறை: 8,500 பயனாளிகள் ஒன்றரை ஆண்டாக காத்திருப்பு
முதியவர் பென்ஷன் உள்ளிட்ட உதவித்தொகை வழங்க... நிதி பற்றாக்குறை: 8,500 பயனாளிகள் ஒன்றரை ஆண்டாக காத்திருப்பு
முதியவர் பென்ஷன் உள்ளிட்ட உதவித்தொகை வழங்க... நிதி பற்றாக்குறை: 8,500 பயனாளிகள் ஒன்றரை ஆண்டாக காத்திருப்பு
ADDED : செப் 04, 2025 10:22 PM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், முதியோர் பென்ஷன் உள்ளிட்ட அரசு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த, 8,500 பயனாளிகளுக்கு அதற்கான ஆணை பிறப்பித்தும், நிதி பற்றாக்குறை காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 'உதவித் தொகை வழங்குவதற்கு போதிய நிதி இல்லை' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகம் முழுதும், வருவாய் துறையில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் மூலம் முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, மாதந்தோறும் தலா 1,200 ரூபாய் உதவித்தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதேபோல், தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித் தொகையாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு பயனாளிகள் ஆன்-லைன் மூலமாகவும், மக்கள் தொடர்பு முகாம், முதல்வர் சிறப்பு திட்ட முகாம் ஆகியவற்றில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய ஒன்பது தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இதில் திருத்தணி தாலுகாவில் -950 பேர், பள்ளிப்பட்டு -750, ஆர்.கே.பேட்டை -800, பொன்னேரியில்- 1,300 பேர் என, விண்ணப்பித்த 8,500 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், உதவித்தொகை வழங்காமல் வருவாய் துறை அதிகாரிகள் அலைகழித்து வருகின்றனர்.
ஆணை பெற்ற பயனாளிகள், தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் வந்து கேட்கும் போது, அங்குள்ள, அதிகாரிகள், 'ஒரு மாதத்தில் உதவித்தொகை கிடைத்துவிடும்' எனக் கூறி, அனுப்புகின்றனர்.
ஆனால், பயனாளிகள் வங்கிகளுக்கும், தாலுகா அலுவலகத்திற்கும் சென்று ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர். கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, உதவித்தொகை வழங்க வேண்டும் என, பயனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது நடந்து வரும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிலும், ஏராளமானோர் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.
மகளிர் உரிமை திட்டத்திற்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுவதால், மற்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவதில், பற்றாக்குறை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் கூறியதாவது:
அரசின் உதவித்தொகை பெற தகுதியான பயனாளிகள் விபரம் குறித்து, மாதந்தோறும் பட்டியல் தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால், அரசு உதவித் தொகை வழங்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், ஆணைகள் பெற்ற பயனாளிகளுக்கும் குறித்த காலத்திற்குள் உதவித்தொகை வழங்க முடியவில்லை.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் இறந்திருந்தால், அவர்கள் பெயர்களை நீக்கி, அதற்கு பதிலாக முன்னுரிமை அடிப்படையில் ஆணை பெற்றுள்ள பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறோம்.
உரிய நிதியுதவி வழங்கினால், அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்தாண்டு நடந்த மக்கள் தொடர்பு முகாமில், முதியோர் உதவித் தொகை திட்டத்தில் விண்ணப்பம் கொடுத்தேன். வருவாய் துறை அதிகாரிகள் விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி, 13 மாதங்களுக்கு முன் உதவித் தொகைக்கான ஆணை வழங்கினர். ஆனால், தற்போது வரை வங்கி கணக்கில் உதவித் தொகை வரவு வைக்கப்படவில்லை.
-ஆர்.தட்சணாமூர்த்தி, 62. பெரியகடம்பூர்.
தனியாக வசித்து வருகிறேன். வயது முதிர்வு காரணத்தால் விவசாய கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. கடந்தாண்டு மார்ச் மாதம் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தேன். ஆவணங்களை ஆய்வு செய்த பின், அதே மாதத்தில் ஆணை வழங்கினர். ஆனால், தற்போது வரை உதவித் தொகை கிடைக்கவில்லை. பலமுறை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கேட்டும், உதவித்தொகை கிடைக்கவில்லை.
- ஜி.பாப்பம்மாள், 70, எஸ்.அக்ரஹாரம்.