/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை அகற்றும் பணி தனியார் மயம் திணறல்! திருவள்ளூரில் மலைபோல் குவியுது
/
குப்பை அகற்றும் பணி தனியார் மயம் திணறல்! திருவள்ளூரில் மலைபோல் குவியுது
குப்பை அகற்றும் பணி தனியார் மயம் திணறல்! திருவள்ளூரில் மலைபோல் குவியுது
குப்பை அகற்றும் பணி தனியார் மயம் திணறல்! திருவள்ளூரில் மலைபோல் குவியுது
ADDED : மே 21, 2024 11:37 PM
திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சியில், குப்பை அகற்றும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டும் 27 வார்டுகளில் முழுமையாக குப்பைகள் அகற்றாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு காரணம், நான்கு சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளதால் தினசரி சேரும் குப்பையை அகற்ற முடியாத நிலை உள்ளது என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 550க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, 19 ஆயிரத்து 22 வீடுகள், 3 ஆயிரத்து 29 வணிக நிறுவனங்கள் உள்ளன. மக்கள் தொகை, 82 ஆயிரத்து 185 பேர் வசிக்கின்றனர்.
வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து தினமும், 11 ஆயிரம் கிலோ மக்கும் குப்பை; 13 ஆயிரத்து 450 கிலோ மக்காத திடக்கழிவுகள் மற்றும் 210 கிலோ அபாயகரமான கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
இதை 53 நகராட்சி பணியாளர்களும், 116 தனியார் துாய்மை பணியாளர்களும் வீடு, வீடாகச் சென்று சேகரித்து வருகின்றனர். மக்கும் குப்பை அனைத்தும், நகரில் உள்ள 17 உரக்கிடங்கு மற்றும் தலக்காஞ்சேரியில் உள்ள உர மையத்திலும் சேகரிக்கப்பட்டு, உரமாக மாற்றப்பட்டு வருகிறது.
மக்காத குப்பை மற்றும் அபாயகரமான கழிவுகள், வளமீட்பு மையங்களில் சேகரிக்கப்பட்டு, அகற்றப்படுகிறது.
மக்காத குப்பை
இந்நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவுப்படி, திருவள்ளூர் நகராட்சியில் குப்பை அகற்றும் பணி முழுதும், தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 138 துப்புரவு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் குப்பைகளை முழுமையாக அகற்ற முடியாததற்கு காரணம் நகராட்சியில் காலியாக உள்ள நான்கு சுகாதார ஆய்வாளர் பணியிடத்தை நிரப்பாதது தான் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் பா.உதயமலர், கமிஷனர் பி.வி.சுதர்சன் ஷா ஆகியோர் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சியில், தினமும் 24 ஆயிரத்து 66 கிலோ மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை அகற்றும் பணி இம்மாதம் முதல், தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது. இப்பணியில், 132 துப்புரவு ஊழியர், 8 மேற்பார்வையாளர், 22 ஓட்டுனர்கள் ஈடுபட்டு உள்ளனர். வீடு, வீடாகச் சென்று குப்பை அகற்றுவதற்கான தள்ளுவண்டி, பேட்டரி வாகனம், வேன் மற்றும் லாரிகளை தனியார் நிறுவனத்தின் பொறுப்பு.
மேலும், வீடு, வீடாகச் சென்று சேகரிக்கப்படும் குப்பையை தனித்தனியாக பிரித்து, உரக்கிடங்கு மற்றும் உர மையத்திற்கு, கொண்டு செல்ல வேண்டும். இதற்காக தினமும் ,1.18 லட்சம் ரூபாய் வீதம், மாதம் 35.40 லட்சம் ரூபாய், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
அபராதம்
தனியார் துப்புரவு பணியாளர்கள், வீடுகளுக்குச் சென்று குப்பை எடுக்கவில்லை என புகார் வரப்பெற்றால், அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், தெருவில் குப்பையை அகற்றாமல், தீ வைத்து எரித்தாலும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

