ADDED : ஜன 23, 2025 08:45 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என்.எம்.எஸ்., நகரில், 2013ம் ஆண்டு, நகர் ஊரைப்பு வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் பூங்கா மற்றும் சிறுவர் விளையாடி மகிழ, ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளுடன் பொழுது போக்கும் முக்கிய இடமாக அந்த பூங்கா இருந்து வந்தது. சில ஆண்டுகளாக, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், அந்த பூங்காவை பராமரிக்கவில்லை என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதனால் அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, நடைபாதை சுற்றி செடி, கொடிகள் சூழ்ந்து, கான்கிரீட் இருக்கைகள் உடைந்து காணப்படுகின்றன.
மேலும், மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சுகாதாரம் பாதிக்கும் நிலையில் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
பொலிவிழந்த பூங்காவிற்கு, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் புத்துயிர் அளிக்க வேண்டும். அழகான செடி, கொடிகள் வளர்த்து, சிறுவர் - சிறுமியர் விளையாடி மகிழ, புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

