/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டி எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி... முடக்கம் செயல்படாததால் வரி ஏய்ப்பு, கடத்தல், கையூட்டு அதிகரிப்பு
/
கும்மிடிப்பூண்டி எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி... முடக்கம் செயல்படாததால் வரி ஏய்ப்பு, கடத்தல், கையூட்டு அதிகரிப்பு
கும்மிடிப்பூண்டி எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி... முடக்கம் செயல்படாததால் வரி ஏய்ப்பு, கடத்தல், கையூட்டு அதிகரிப்பு
கும்மிடிப்பூண்டி எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி... முடக்கம் செயல்படாததால் வரி ஏய்ப்பு, கடத்தல், கையூட்டு அதிகரிப்பு
ADDED : ஆக 11, 2025 10:55 PM

கும்மிடிப்பூண்டி : சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திர - தமிழக எல்லையான எளாவூரில் ஏழு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி முறையாக செயல்படாமல் முடங்கியுள்ளது. சோதனைச்சாவடியில், 16 வழித்தடங்கள் இருந்தும், இரண்டு வழித்தடங்கள் மட்டும் செயல்படுவதால், சரக்கு போக்குவரத்தில் தாமதம், வரி ஏய்ப்பு, கடத்தல், கையூட்டு அதிகரித்து வருவதாக சமூக ஆவர்லர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்துடன், ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருப்பது சென்னை --- கொல்கட்டா தே சிய நெடுஞ்சாலை.
அந்த தேசிய நெடுஞ்சாலையில், தமிழக எல்லை துவங்கும் இடமான கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில், 2018, ஜூன் மாதம், தமிழக போக்குவரத்து துறை சார்பில், 137.18 கோடி ரூபாய் மதிப்பில், முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட, நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.
இந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து துறையுடன், வருவாய் துறை, போலீஸ், கலால், பொது சுகாதாரம், கால்நடை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் பிரத்யேக கணினி மென்பொருளில் ஒருங்கிணைந்து செயல்படும் என, தெரிவிக்கப்பட்டது.
சோதனைச்சாவடிக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தகுதி சான்று, காப்பீடு, வரி பாக்கி, வழக்குகள் என ஒட்டுமொத்த வாகன வரலாற்றையும் கண்டறியும் வகையில் அந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டது.
மேலும் அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் சோதனை மேற்கொள்வதால், பல இடங்களில் அந்தந்த துறை சார்பில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, துரித மாக சரக்குகளை கொண்டு செல்லும் நோக்கில், அந்த சோதனைச்சாவடி ஏற்படுத்தப்பட்டது.
ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 வழித் தடங்களும், தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்கு, ஆறு வழித் தடங்களும் உள்ளன. அனைத்து தடங்களிலும் எடை மேடை இருப்பதால், வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நவீனமயமான இந்த சோதனைச்சாவடி, திறந்து ஏழு ஆண்டுகளாகியும் முழுமையாக இயங்கவில்லை. மாறாக அனைத்து தடங்களும், மூடப்பட்டு, ஒரு வழியாக மட்டும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப் படுகின்றன.
அந்த தடத்திலும் வாகனத்தின் எடை சரி பார்க்கப்படுவதில்லை. ஆவணங்கள் சரி பார்ப்பதும், அலுவலர்களை சரி கட்டுவதும் என சாதாரண சோதனைச்சாவடி போன்று இயங்கி வருவதால், வரி ஏய்ப்பு, கையூட்டுகள் தாராளமாக அரங்கேறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சோதனைச்சாவடிக்காக ஏழு ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட, குளிர்சாதன இயந்திரங்கள், கணினிகள், எல்.இ.டி., 'டிவி'க்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும், பயன்பாடின்றி வீணாகி போனதாக கூறப்படுகிறது. சோதனைச்சாவடி நுழைவாயிலும், வெளியேறும் இடத்திலும் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு 'பூத்'கள் அனைத்தும் பயன் படுத்தப்படாமல் சிதிலமடைந்தன.
சோதனைச்சாவடிக்கு மீண்டும் புத்துயிர் அளித்து, முழுமையாக பயன்படுத்தினால், பாதுகாப்பான சரக்கு போக்குவரத்துடன், கடத்தல்கள், வரி ஏய்ப்புகள் தடுக்க வழி வகுக்கும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஊழியர்கள் பற்றாக்குறையால் சோதனைச்சாவடியில் உள்ள நவீன வசதிகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. விரைவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, முறையாக செயல்படுத்தப்படும்' என்றார்.