/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தினால்...புது நீர்த்தேக்கம் : ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம்
/
கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தினால்...புது நீர்த்தேக்கம் : ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம்
கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தினால்...புது நீர்த்தேக்கம் : ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம்
கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தினால்...புது நீர்த்தேக்கம் : ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம்
ADDED : ஜூன் 21, 2025 12:33 AM

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையில் உள்ள மாநெல்லுார் ஏரியை வந்தடையும் மழைநீர், உபரிநீர் கால்வாய் வழியாக ஆண்டுதோறும், 4 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறது. மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தி, நீர்த்தேக்கமாக மாற்றினால் மழைநீரை சேமிக்கலாம். அதன் வாயிலாக விவசாயிகள் மட்டுமின்றி, மாநெல்லுார் சிப்காட்டிற்கு வரவுள்ள தொழிற்சாலைகளுக்கும், போதிய நீராதாரம் கிடைக்க வழிவகுக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில், ஆந்திர மாநிலம் பகுதிகளில் இருந்து கிழக்கு பகுதியை நோக்கி வரும் மழைநீர், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள மாநெல்லுார் பெரிய ஏரி வந்தடைகிறது. இது, 0.049 டி.எம்.சி., கொள்ளளவு உடையது.
இந்த ஏரி தண்ணீர், சாணாபுத்துார், எளாவூர் ஏழு கண் பாலம் வழியாக, 9 கி.மீ., கால்வாயை கடந்து கடலில் கலக்கிறது. இடைப்பட்ட கால்வாயில் ஒரு தடுப்பணை கூட இல்லை.
ஒவ்வொரு ஆண்டு மழைக்காலங்களில், இந்த கால்வாய் வாயிலாக, 4 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மாநெல்லுார் ஏரி, 296 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நீர் பாசனத்தை நம்பி, 495 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை, தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பி வழிந்து, கால்வாய் வழியாக கடலில் கலக்கும். ஆனால், 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி, சில நாட்கள் மழை பெய்தாலே ஏரி நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.
ஏரியின் பல பகுதியில் திட்டு திட்டாக மணல் குவிந்து கிடப்பதால், நிலப்பரப்பு போல் காட்சியளிக்கிறது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிப்காட்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில், கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகங்களை தொடர்ந்து, மாநெல்லுார் சிப்காட் வளாகம் துவக்கப்பட உள்ளது.
அதற்காக மாநெல்லுார், வாணியமல்லி, மாதர்பாக்கம், சாணாபுதுார், சூரப்பூண்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 2,000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் உட்பட, 4,385 ஏக்கர் பரப்பளவு நிலங்கள், மூன்று கட்டங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநெல்லுார் சிப்காட் துவங்கும் பட்சத்தில், தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்துவது என்பது மிகவும் சவாலாக இருக்கும். மேலும், கிராம மக்கள், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி பாதிக்கும் நிலை ஏற்படும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு
மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்றி தண்ணீரை சேமிக்கும் பட்சத்தில், வீணாக கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆண்டுதோறும் நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்க வழிவகுக்கும்.
அதன் வாயிலாக தொழிற்சாலைகள், பொதுமக்கள், கால்நடைகள், விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்யும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநெல்லுார் சிப்காட் திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவர்.
மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்றினால், அனைவரும் பயன்பெற வழிவகுக்கும்என, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மாநெல்லுார் ஏரியை நீர்த்தேக்கமாக மாற்றும் திட்டம் குறித்து, அரசு கருத்துரு கேட்கும் பட்சத்தில், திட்ட வரைவு தயாரித்து அனுப்ப தயாராக உள்ளோம்.
- நீர்வளத் துறை பொறியாளர், கும்மிடிப்பூண்டி.