/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாமந்தவாடா தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
சாமந்தவாடா தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 31, 2025 12:04 AM

பள்ளிப்பட்டு:  வெள்ளத்தால் பாதிக்கப்படும் சாமந்தவாடா தரைப்பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, சொரக்காய்பேட்டை, நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
இதில் சாமந்தவாடா மற்றும் ஞானம்மாள் பட்டடை இடையே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக சாமந்தவாடா கிராமத்தினர் பள்ளிப்பட்டு மற்றும் நகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தரைப்பாலம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் மழைக்காலத்தில் பாலத்தின் ஏதேனும் ஒரு பகுதி, வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
இதற்கு தற்காலிக தீர்வாக மணல் மூட்டைகள் மற்றும் ஜல்லிகற்களை கொண்டு ஒன்றிய நிர்வாகம் சீரமைத்து வருகிறது. அந்த தற்காலிக சீரமைப்பு மழைக்காலத்தில் மீண்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
கடந்த ஏப்., மாதம் சாமந்தவாடா தரைப்பாலம் , சிமென்ட் குழாய்கள், மணல் மூட்டைகள் மற்றும் ஜல்லிகற்கள் கொட்டி சீரமைக்கப்பட்டிருந்தது.
தற்போது பெய்து வரும் கனமழையால் கொசஸ்தலை யில் வெள்ளம் பெருக் கெடுத்து பாயும் நிலையில், மணல் மூட்டைகளும், ஜல்லிகற்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
தற்போது இந்த பாலத்தி ன் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலத்தில் தரைப்பாலம் சேதம் அடைவதால், சாமந்தவாடா பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தற்காலிகமாக சீரமைத்து அரசு நிதியை வீணாக்குவதை தவிர்த்து, நிரந்தர தீர்வு காண வேண்டுமென, பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

