/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்... படிப்படியாக குறைப்பு சிறு, குறு விவசாயிகள் பாதிப்பதாக புலம்பல் 2026 சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?
/
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்... படிப்படியாக குறைப்பு சிறு, குறு விவசாயிகள் பாதிப்பதாக புலம்பல் 2026 சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்... படிப்படியாக குறைப்பு சிறு, குறு விவசாயிகள் பாதிப்பதாக புலம்பல் 2026 சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்... படிப்படியாக குறைப்பு சிறு, குறு விவசாயிகள் பாதிப்பதாக புலம்பல் 2026 சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?
ADDED : மார் 22, 2025 11:03 PM

திருவாலங்காடு :தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தல் எதிரொலியை தொடர்ந்து, நகை கடன் வழங்குவது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி உட்பட ஒன்பது தாலுகா பகுதிகளில், 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
வங்கி செயலர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் சங்கங்களில், 70,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, சிறு விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன், உரக்கடன், கறவை மாடு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன.
நெல், சிறுதானியம் விவசாயம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு நகைக்கடன் பெற, அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் நாடி செல்கின்றனர். ஒருவர் அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை நகைக்கடன் பெறலாம். மேலும், அந்தந்த வங்கிகளின் பண பரிவர்த்தனையை பொறுத்து நகைக்கடன் வழங்கப்படுகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, நகைக்கடன் பண பரிவர்த்தனை முழுதும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. வங்கியின் செயல்பாட்டை பொறுத்து, நகைக்கடனுக்கான பணம் வழங்கப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தேர்தல் அறிவிப்பில் இடம் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்த விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே, 2026 சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள், தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில், 'தேர்தல் அறிவிப்பில், நகைக்கடன் தள்ளுபடி நிச்சயம் வரும்' என்ற எதிர்பார்ப்பில், சில விவசாயிகள் அல்லது விவசாயிகள் போர்வையில் வரும் பிற நபர்கள், கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைக்க செல்வது அதிகரித்து வருகிறது.
இதனால், உஷாரான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம், நகைக்கடன் பண பரிவர்த்தனையை, மறைமுகமாக குறைக்க துவங்கியுள்ளது. அதே சமயத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் சில வங்கிகளுக்கு கேட்கும் நிதியில், 30 சதவீதம் வழங்கப்படுகிறது.
மேலும், பல வங்கிகளில் நிதி போதிய அளவில் இல்லாததால், வங்கிக்கு வரும் சிறு விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.