/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தி.மு.க., கவுன்சிலர்களை சமாளிப்பதில் காஞ்சிபுரம் மேயருக்கு கடும் நெருக்கடி மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏன்?
/
தி.மு.க., கவுன்சிலர்களை சமாளிப்பதில் காஞ்சிபுரம் மேயருக்கு கடும் நெருக்கடி மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏன்?
தி.மு.க., கவுன்சிலர்களை சமாளிப்பதில் காஞ்சிபுரம் மேயருக்கு கடும் நெருக்கடி மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏன்?
தி.மு.க., கவுன்சிலர்களை சமாளிப்பதில் காஞ்சிபுரம் மேயருக்கு கடும் நெருக்கடி மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏன்?
ADDED : மார் 13, 2024 11:10 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியின் 51 கவுன்சிலர்களில், 33 பேர் தி.மு.க., 8 பேர் அ.தி.மு.க., 8 பேர் சுயேச்சை, தலா ஒருவர் காங்., - பா.ஜ.,வைச் சேர்ந்தோர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த, மேயர் மகாலட்சுமி பொறுப்பேற்றது முதலே, கவுன்சிலர்களின் எதிர்ப்பு, உட்கட்சி பூசல், கமிஷன் விவகாரம் போன்றவற்றால், மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு பிரச்னைகள் நடந்தபடி உள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், அதன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் மகாலட்சுமி பங்கேற்றார்.
இதில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதை வடிகால் திட்டம் பற்றி, கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், கமிஷனரின் செயல்பாடு மீது அதிருப்தி அளிப்பதாக கூறியும், கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும், மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய, 21 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்வதாக, மேயர் மகாலட்சுமி அறிவித்தார்.
ஆனால், தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும் எனக்கூறி, காங்., கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன், தி.மு.க., - அ.தி.மு.க., என அனைத்து கட்சி கவுன்சிலர்களும், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்களிடையே மேயர் மகாலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இறுதியாக, மேயர் கணவர் யுவராஜும், அவர்களிடம் பேச்சு நடத்தினார்.
மாநகராட்சி கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாகவும், நாளை மாநகராட்சி கூட்டம் நடக்கும் என, மேயர் மகாலட்சுமி அறிவித்ததை தொடர்ந்து, கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.
ரத்து செய்யப்பட்ட மாநகராட்சி கூட்டம், நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., என, 13 கவுன்சிலர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
மற்ற கவுன்சிலர்களும் வருவர் என, நீண்ட நேரம் காத்திருந்த மேயர் மகாலட்சுமி, ஒரு மணி நேரம் கழித்து, கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால், நேற்றைய கூட்டமும் நடக்கவில்லை.
மாநகராட்சி நிர்வாகத்தில், 33 கவுன்சிலர்களுடன், தி.மு.க., தரப்புக்கு பெரும்பான்மை இருந்தும், மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியாத நிலை நீடிக்கிறது.
மண்டல அலுவலகத்தில் நேற்று கூடிய, தி.மு.க., மட்டுமல்லாமல், அ.தி.மு.க., உட்பட பிற கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், கமிஷன் தராதது உள்ளிட்ட காரணங்களை கூறி பேசி முடிவெடுத்த பின், மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதமும், தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து, மேயர் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதுபோல, இப்போதும் மாநகராட்சி கூட்டம் நடத்த முடியாமல் சிக்கல் எழுந்துள்ளது.

