/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
/
போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
ADDED : நவ 07, 2025 12:14 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில், ஈடுபட்டனர்.
திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 44. இவர் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான ஜெயா நகரில் உள்ள இடத்தில் கடந்த மாதம் 31ம் தேதி நான்கு பேர் அமர்ந்து மது அருந்தி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை கல்யாண சுந்தரம் தட்டி கேட்டார்.
ஆத்திரமடைந்த அவர்கள் கல்யாண சுந்தரத்தை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கல்யாணசுந்தரம் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீசார், ஜானி, 24, சரவணன், 23, குமரேசன், 24, பிரவீன், 23 ஆகிய நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜானி தரப்பில் கொடுத்த புகாரையடுத்து, கல்யாணசுந்தரம், கிஷோர், 22, ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள், வக்கீல் கல்யாணசுந்தரம் மீது வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசாரை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து வக்கீல்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

