/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுார் விளையாட்டு பூங்கா உடற்பயிற்சி மையம் பாழ்
/
மெதுார் விளையாட்டு பூங்கா உடற்பயிற்சி மையம் பாழ்
ADDED : அக் 30, 2024 09:42 PM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், மெதுார் ஊராட்சியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 40 லட்சம் ரூபாயில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
இங்கு, பெரியவர்கள் நடைபயிற்சி செல்வதற்கான பாதைகள், ஓய்வெடுக்க இருக்கைகள், சிறுவர்களுக்கான ஊஞ்சல், ராட்டினம், சறுக்குமரம் ஆகியவை அமைக்கப்பட்டன. இளைஞர்களுக்காக உடற்பயிற்சி கூடமும், அதில் பல்வேறு உபகரணங்கள் பொருத்தப்பட்டன.
தொடர் கண்காணிப்பு இல்லாதாதல், தற்போது இந்த பூங்கா வளாகம் முழுதும் புற்கள் முளைத்தும், மழைநீர் தேங்கியும் பராமரிப்பு இன்றி உள்ளது.
ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் அமைந்ததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
மக்களின் பயன்பாடு இல்லாமல் போனதை தொடர்ந்து, இங்கிருந்த உடற்பயிற்சி உபகரணங்கள், இரும்பு தளவாடங்கள் ஒவ்வொன்றாக மாயாகின. சுற்றுச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஜன்னல்களும் காணவில்லை.
பல லட்சம் ரூபாய் நிதி செலவிட்டு சிறுவர்கள், இளைஞர்கள், பெரியர்களின் உடல்நலனை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பூங்கா தற்போது பாழாகியுள்ளது.
அரசின் நல்ல திட்டங்கள் அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு இல்லையெனில், இதுபோன்ற நிலை தான் ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.