/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் பணி துவங்குவதில் மீஞ்சூர் ஒன்றியம் மெத்தனம்
/
பழவேற்காடில் ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் பணி துவங்குவதில் மீஞ்சூர் ஒன்றியம் மெத்தனம்
பழவேற்காடில் ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் பணி துவங்குவதில் மீஞ்சூர் ஒன்றியம் மெத்தனம்
பழவேற்காடில் ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் பணி துவங்குவதில் மீஞ்சூர் ஒன்றியம் மெத்தனம்
ADDED : நவ 25, 2024 02:32 AM

பழவேற்காடு:பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்தது.
கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மேலும், பழவேற்காடு - பொன்னேரி நெடுஞ்சாலையில் இருந்து தாழ்வான பகுதியில் கட்டடம் இருப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் அலுவலகத்திற்கு புகுந்து சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைத்து தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம், 10ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை இடித்துவிட்டு, புதியது அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஓபசமுத்திரம், ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், மீஞ்சூர் ஒன்றியத்தில் பழவேற்காடு மற்றும் லைட்அவுஸ்குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு, 1,600 சதுர அடியில் புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்காக, மறுசீரமைக்கப்பட்ட தேசிய கிராம சுயாட்சி திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாயிலாக, தலா, 30.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
பழவேற்காடு தவிர்த்து மற்ற இடங்களில் அதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. அதே சமயம், பழவேற்காடு ஊராட்சி மன்றத்திற்கு புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.
நிதி ஒதுக்கியும், பணிகளை துவங்குவதில் ஊராட்சி மற்றும் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு அலுவலகம் வந்து செல்கின்றனர். கட்டடம் உறுதிதன்மையை இழந்து வரும் நிலையில், அசம்பாவிதங்கள் நேரிடும் அபாயம் உள்ளது. கட்டடம் அமைவதில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.