/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நவீன எரிவாயு தகனமேடை திட்டம் முடக்கம்: பயனுக்கு வராததால் மக்கள் அதிருப்தி
/
நவீன எரிவாயு தகனமேடை திட்டம் முடக்கம்: பயனுக்கு வராததால் மக்கள் அதிருப்தி
நவீன எரிவாயு தகனமேடை திட்டம் முடக்கம்: பயனுக்கு வராததால் மக்கள் அதிருப்தி
நவீன எரிவாயு தகனமேடை திட்டம் முடக்கம்: பயனுக்கு வராததால் மக்கள் அதிருப்தி
ADDED : அக் 21, 2024 02:14 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், திருஆயர்பாடி கள்ளுக்கடைமேடு சுடுகாடு பகுதியில், 2022ல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.44 கோடி ரூபாயில், நவீன எரிவாயு தகனமேடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
அங்கு எரிவாயு உருளை பொருத்தும் இடம், புகைபோக்கி குழாய், ஆம்புலன்ஸ் வந்து நிற்க இடம், எரிவாயு சேமிப்பு கிடங்கு, ஜெனரேட்டர் அறை, அலுவலக அறை என, மொத்தம், 2,800 சதுர அடியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்டுமான பணிகளை தொடர்ந்து, சடலங்களை எரிவாயு வாயிலாக எரிப்பதற்கான இயந்திரங்கள், டிராலி, எரிவாயு குழாய் இணைப்பு, மின் இணைப்பு, சுற்றுச்சுவர், பாதை வசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
கடந்தாண்டு ஜூலை மாதம் கட்டுமான பணிகள் முடிந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்காக காத்திருந்தது.
கடந்த மார்ச் மாதம் அதற்கான அனுமதியும் கிடைத்தபோது, லோக்சபா தேர்தலுக்கு பின், பயனுக்கு கொண்டு வரப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நவீன எரிவாயு தகனமேடையை திறந்து வைத்தார்.
ஆனால், இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், தற்போது வரை எரிவாயு தகனமேடை பயனுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
திட்டம் பயனுக்கு வராமல் முடங்கி கிடப்பதுடன், அதற்காக செலவிடப்பட்ட நிதியும் வீணாகி வருகிறது. பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருஆயர்பாடி கள்ளுக்கடைமேடு, சின்னகாவணம், பஞ்செட்டி சாலை, பெரியகாவணம் ஆகிய இடங்களில் சுடுகாடு மற்றும் தகனமேடைகள் உள்ளன.
இங்கு இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டும்போது, அதிலிருந்து வெளியேறும் புகையால், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், மழைக்காலங்களில் சடலங்களை எரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல், எரிவாயு தகன மேடையை பயனுக்கு கொண்டு வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

