/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சொத்து தகராறில் கொலை குற்றவாளி போலீசில் சரண்
/
சொத்து தகராறில் கொலை குற்றவாளி போலீசில் சரண்
ADDED : ஜூன் 23, 2025 11:13 PM
திருத்தணி, திருத்தணி அருகே சொத்து தகராறில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது டிராக்டரால் மோதியும், கத்தியால் வெட்டியும் கொன்றவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் வெங்கடேஸ்வரன், 60; விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அமாவாசை மகன் வெங்கடேசன், 52. இவர்கள் இருவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது.
இதுதொடர்பாக, திருத்தணி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சில நாட்களுக்கு முன் வெங்கடேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பெற்று, பிரச்னைக்குரிய நிலத்தில் திருத்தணி தாசில்தார் மலர்விழி, சர்வேயர் துர்கா ஆகியோர் முன்னிலையில் நில அளவீடு செய்தார்.
இது, வெங்கடேஸ்வரனுக்கு சாதகமாக இருந்ததால், வெங்கடேசன் கடும் கோபத்தில் இருந்தார். நேற்று மாலை, வெங்கடேஸ்வரன் இருசக்கர வாகனத்தில், ஆந்திர மாநிலம் விஜயபுரம் பகுதிக்கு சென்று, மீண்டும் அரும்பாக்கம் நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, விஜயபுரம் அருகே வந்தபோது, எதிரே டிராக்டர் ஓட்டி வந்த வெங்கடேசன், ஆத்திரத்தில் இருசக்கர வாகனம் மீது மோதினார். இதில், வெங்கடேஸ்வரன் தவறி கீழே விழுந்தார்.
பின், வெங்கடேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமாரியாக வெங்கடேஸ்வரனை வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு வெங்கடேசன், கத்தியுடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதுகுறித்து, ஆந்திர மாநிலம் விஜயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வெங்கடேசன் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து வெட்டியதாக தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தால் அரும்பாக்கம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.