/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் புத்துயிர் பெறும் புறக்காவல் நிலையம்
/
கும்மிடியில் புத்துயிர் பெறும் புறக்காவல் நிலையம்
ADDED : ஜன 26, 2025 02:52 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், அங்குள்ள கே.எல்.கே., அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, 2016ம் ஆண்டு நவீன புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
அதை போலீசார் முறையாக பராமரிக்க தவறியதால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி முழுதும் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி., திரை, ஒலி பெருக்கி என அனைத்தும் வீணாகி பயனற்று போனது.
பின், கால்வாய் பணிக்காக, புறக்காவல் நிலையத்தின் சுவர்களும், தரையும் பெயர்க்கப்பட்டன. முற்றிலும் சிதிலமடைந்த புறக்காவல் நிலையத்திற்கு புத்துயிர் அளித்து, பஜார் பகுதியில் நடக்கும் அசம்பாவிதங்களை போலீசார் தடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரி வந்தனர்.
போலீசார் கேட்டு கொண்டதன்படி, மீண்டும் புறக்காவல் நிலையத்திற்கு புத்துயிர் அளிக்கும் பணிகளை வியாபாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தரை மற்றும் சுவர்களை சீரமைக்கும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படிப்படியாக அனைத்தும் வசதிகளும் கொண்டு வரப்படும் என, கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.