/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடியும் அபாய நிலையில் ஊராட்சி அலுவலக கட்டடம்
/
இடியும் அபாய நிலையில் ஊராட்சி அலுவலக கட்டடம்
ADDED : செப் 21, 2025 11:51 PM

திருத்தணி;எஸ்.அக்ரஹாரம் ஊராட்சி அலுவலக கட்டடம் விரிசலடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில், படவேட்டம்மன் கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது.
இக்கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், விரிசல் அடைந்தும், கூரை சேதமடைந்தும் உள்ளன.
இதனால், மழை பெய்யும் போது நீர்க்கசிவு ஏற்பட்டு, ஆவணங்கள் வீணாகி வந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பழுதடைந்த கட்டடத்தில் இருந்து ஊராட்சி அலுவலகம், அதே கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு சிறிய அறைக்கு மாற்றப்பட்டது.
அங்கு, ஆவணங்கள், ஊராட்சிக்கு தேவையான கணினி மற்றும் பொருட்கள் வைக்க இடமில்லாமல், ஊராட்சி செயலர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சி அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாததால், கூட்டங்கள் நடத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.