/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம்
/
ரயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம்
ரயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம்
ரயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம்
ADDED : பிப் 17, 2024 11:20 PM

அரக்கோணம், அரக்கோணம் - திருப்பதி ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது கைனுார் கிராமம். இங்கு ரயில் தண்டவாளத்தை கடந்து வாகன ஓட்டிகள் சென்று வந்தனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இங்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கேட் மூடப்பட்டு ரயில்வே நிர்வாகத்தால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கடந்த ஓராண்டாக பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் சின்ன கைனுார், பெரிய கைனுார், கண்டிகை, புதுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் என, 10,000த்திற்கும் மேற்பட்ட கிராமவாசிகள் சுமார் 5 கி.மீ., துாரம் சுற்றி சென்று வருகின்றனர்.
இதனால் அவர்கள் இரவு நேரம் மற்றும் மழைக்காலத்தில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கின்றனர். எனவே பாதியில் நிறுத்தப்பட்ட சுரங்கப்பாதை பகுதியில் தற்காலிக வழி அமைத்து தர வேண்டி அப்பகுதிவாசிகள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாசில்தார் செல்வி, அரக்கோணம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சு நடத்தினர்.
பின் தண்டவாளத்தை கடக்க தற்காலிக பாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.