/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை பணி நிறுத்தம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
/
சாலை பணி நிறுத்தம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : ஆக 01, 2025 01:03 AM
ADDED : ஆக 01, 2025 01:01 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதியில், 16 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணி நிறுத்தப்பட்டதற்கு, பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
![]() |
பூண்டி ஒன்றியம், சிறுவானுார் கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் அமைந்துள்ள இந்த நகரில், 250க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியேறி உள்ளனர்.
சிறுவானுார் கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த நகரில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
குடியிருப்புவாசிகளின் வேண்டுகோளை ஏற்று, 16 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
ஆனால், பணி நிறைவடையாமல், பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளின்படி, கலெக்டர் பிரதாப் கடந்த சில நாட்களுக்கு முன், அங்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது, குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியை தவிர்த்து, புதிதாக வீடு கட்டப்படும் பகுதியை அதிகாரிகள் காண்பித்துள்ளனர். இதையடுத்து, குறைந்த எண்ணிக்கையில் வீடு உள்ளதால், சாலை அமைக்கும் பணியை கலெக்டர் நிறுத்த கூறியதாக, பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் குடியிருப்பு நலச்சங்கத்தினர் கூட்டம் நடத்தினர். கலெக்டரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.