/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 7,605 வீடுகளுக்கு குழாய் பதிப்பு பணி தீவிரம்
/
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 7,605 வீடுகளுக்கு குழாய் பதிப்பு பணி தீவிரம்
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 7,605 வீடுகளுக்கு குழாய் பதிப்பு பணி தீவிரம்
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 7,605 வீடுகளுக்கு குழாய் பதிப்பு பணி தீவிரம்
ADDED : பிப் 20, 2025 01:38 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில், குடியிருப்புகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்காக, நான்கு மண்டலங்களில், 7.605 வீடுகளுக்கு, 5.20 கோடி ரூபாயில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், முதல்கட்டமாக, 62.82 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 2018ல் துவங்கப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட, 1 - 5 வரையிலான வார்டுகளை தவிர்த்து, மீதம் உள்ள, 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கு, தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், மேன்ஹோல்கள் ஆகியவை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குடியிருப்புகளின் கழிவுநீரை சேகரித்து, சுத்தகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடை மேடு, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் கீழ்நிலை கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு, அங்கு பம்பிங் மோட்டார், ஜெனரேட்டர் உள்ளிட்வை பொருத்தப்பட்டு உள்ளன.
அதேபோல, நகராட்சிக்கு உட்பட்ட பெரியகாவணம் பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே, தினமும் 65 லட்சம் லிட்டர் கழிவுநீரை பல்வேறு நிலைகளில் சுத்தகரித்து, நன்னீராக்கி ஆற்றில் விடுவதற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தெருக்களில் குழாய் பதித்தல், சேகரிப்பு நிலையங்களுக்கான கட்டுமானம், சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவுற்று உள்ளன.
அடுத்த கட்டமாக, தெருக்களில் பதிக்கப்பட்ட குழாய்களுடன், குடியிருப்புகளின் கழிவுநீர் குழாய்களை இணைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
நகராட்சி உட்பட்ட நான்கு மண்டலங்களில், 7,605 குடியிருப்புகளுக்கு, 'இன்டர்னல் பிளம்பிங்' முறையில் இணைப்பு வழங்குவதற்கு, 5.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு வீட்டின் முன், 90 சதுர செ.மீ., அளவில் சிறிய தொட்டி கட்டப்படுகிறது. அதில், குடியிருப்புகளின் கழிவுநீர் வருவதற்காக குழாய் பதிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
ஒரு பகுதியில் குடியிருப்புகளின் குழாயும், மற்றொரு பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக அங்கு ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாயும் இந்த தொட்டியில் இணைகிறது.
தற்போது பாலாஜி நகர், திருவாயற்பாடி பகுதிகளில் உள்ள வீடுகளின் முன், தொட்டி அமைக்கும் பணிகளில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டத்தின் பல்வேறு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்டமாக வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால், பொன்னேரியில் விரைவில் திட்டம் செயலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போதுதான் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்குவதற்கான தொட்டிகள், குழாய் பதிப்பு பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதுவரை, 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குழாய் பதித்து, தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இப்பணிகள் நடைபெறுகிறது. ஒரு மாதம் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளும்போதுதான், குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் எப்போது முடியும் என்பதும் அதற்கான கால இலக்கும் நிர்ணயிக்க முடியும்.
அதே சமயம், வீடுகளுக்கான குழாய் இணைப்பு மற்றும் தொட்டிகள் அமைக்கும் பணிகளை துரிதமாக முடித்து, திட்டத்தை விரைவில் பயனுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

