/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்டம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு * கிடப்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் * அதிகாரிகள் அலட்சியமென குற்றச்சாட்டு
/
மாவட்டம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு * கிடப்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் * அதிகாரிகள் அலட்சியமென குற்றச்சாட்டு
மாவட்டம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு * கிடப்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் * அதிகாரிகள் அலட்சியமென குற்றச்சாட்டு
மாவட்டம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு * கிடப்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் * அதிகாரிகள் அலட்சியமென குற்றச்சாட்டு
ADDED : நவ 21, 2024 12:45 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் 'மீண்டும் மஞ்சப்பை' திட்ட விழிப்புணர்வு கிடப்பில் போடப்பட்டுள்ளதோடு, அதிகாரிகள் பிளாஸ்டிக்கை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 2021ல் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
இதையடுத்து மாநிலம் முழுதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் தலைமையில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் திருத்தணி முருகன் கோவில் என, நான்கு இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில், 10 ரூபாய் செலுத்தி, ஒரு மஞ்சப்பையை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை குறைக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர்.
ஆனால், பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், தற்போது பிளாஸ்டிக் பை நடமாட்டம் அதிகரித்துள்ளது. மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வும், பெயரளவிற்கு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிளாஸ்டிக் மறுசுழற்சி
பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக்கேஜிங் பைகள், தொழிற்சாலை லைனர்கள், சுருள்கள், வணிக குப்பைகள், மளிகை பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் போன்றவைகளை உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது.
இந்த பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்தால் பயனற்றதாக உள்ளன. பிளாஸ்டிக் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மட்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகின்றன.
எனவே, தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மீண்டும் தொடர மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு எங்களுக்கு மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வுக்கு மட்டும் தான் உத்தரவிட்டது. ஆனால், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, ஊராட்சி உட்பட அரசு அதிகாரிகள் தான் எடுக்க வேண்டும். மேலும், பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாசு கட்டுப்பாடு அதிகாரி,
திருவள்ளூர்.