/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த கட்டடத்தில் பூனிமாங்காடு அரசு சுகாதார நிலையம்; விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் நோயாளிகள் பீதி
/
பழுதடைந்த கட்டடத்தில் பூனிமாங்காடு அரசு சுகாதார நிலையம்; விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் நோயாளிகள் பீதி
பழுதடைந்த கட்டடத்தில் பூனிமாங்காடு அரசு சுகாதார நிலையம்; விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் நோயாளிகள் பீதி
பழுதடைந்த கட்டடத்தில் பூனிமாங்காடு அரசு சுகாதார நிலையம்; விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் நோயாளிகள் பீதி
ADDED : மார் 18, 2025 12:42 AM

திருத்தணி; திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு பூனிமாங்காடு, நல்லாட்டூர், கோதண்டராமபுரம், பொன்பாடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு கர்ப்பிணியருக்கு சிகிச்சை, பரிசோதனைகள் மற்றும் பிரசவம் பார்க்கப்படுகிறது. இதுதவிர, மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கியிருப்பதற்கு குடியிருப்பு வசதி மற்றும் அறுவை சிகிச்சை அரங்கமும் உள்ளன.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் பழுதடைந்தும், கான்கிரீட் தளம் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
குறிப்பாக, சுகாதார நிலைய வளாகத்தில் அதிகளவில் செடிகள் வளர்ந்தும், பிரசவ வார்டு, மருத்துவர் அறை, உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அறை மற்றும் கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் கண்ணாடிகள் உடைந்தும், கதவுகள் பழுதடைந்தும் உள்ளன.
இதனால், சுகாதார நிலையத்திற்குள் அடிக்கடி பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் சுகாதார நிலையத்திற்கு புகுந்து விடுகிறது. மூன்று நாட்களுக்கு முன், பிரசவ அறையில் உள்ள உடைந்த ஜன்னல் கதவுகள் வழியாக, ஐந்தரை அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்றிருந்த இரு தாய்மார்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
இதுபோன்று அவ்வப்போது நடப்பதால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்தும், தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.