/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் புதிய உயர்மட்ட பாலம்...ரூ.65 கோடி!:அரசு அனுமதிக்கு பின் பணிகள் துவங்க தயார்
/
புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் புதிய உயர்மட்ட பாலம்...ரூ.65 கோடி!:அரசு அனுமதிக்கு பின் பணிகள் துவங்க தயார்
புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் புதிய உயர்மட்ட பாலம்...ரூ.65 கோடி!:அரசு அனுமதிக்கு பின் பணிகள் துவங்க தயார்
புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் புதிய உயர்மட்ட பாலம்...ரூ.65 கோடி!:அரசு அனுமதிக்கு பின் பணிகள் துவங்க தயார்
ADDED : மே 01, 2024 01:31 AM

திருவள்ளூர்:புதுச்சத்திரம் - திருநின்றவூர் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் குறித்து, சட்டசபையில் அரசு அறிவித்துள்ளது. 65 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு உத்தரவிட்டால் 20 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் வாகனங்களுக்கு விமோசனம் கிடைக்கும் வகையில் மேம்பால பணிகள் துவங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமழிசை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளவேடு அடுத்துள்ளது, புதுச்சத்திரம். இங்கிருந்து, கூவம் ஆற்றை கடந்து திருநின்றவூர் வழியாக ஆவடி மற்றும் பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணக்கும் வகையில், கடந்த 1950ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
புதுச்சத்திரத்தில் இருந்து வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியார் பஸ், தொழிற்சாலை பஸ், கனரக வாகனம் உட்பட, தினமும் 15,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த தரைப்பாலம், கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதையடுத்து, ஒரு மாதத்திற்கு பின், 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த மூன்றாவது நாளிலேயே மீண்டும் சேதமடைந்தது. அதன்பின் மீண்டும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
மேலும், குறுகிய பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், 20 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் கடும் சிரமபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது:
புதுச்சத்திரம் - திருநின்றவூர் கூவம் ஆற்றில் புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து அரசுக்கு கோரிக்கை அளித்துள்ளோம். தற்போது, புதுச்சத்திரம் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், இன்று வரை அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை.
மேலும், 45 கோடி புதிய மேம்பாலத்திற்கும், நில எடுப்புக்கு 20 கோடி என, மொத்தம் 65 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அளித்துள்ளோம்.
அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு மற்றும் முறையான உத்தரவு வந்தவுடன் வருவாய்த்துறை மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி 100 சதவீதம் நிறைவடைந்தவுடன், புதிய மேம்பால பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, புதுச்சத்திரம் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளதால், அதற்கு தகுந்தாற்போல, 15 மீட்டர் அகலம், 198 மீட்டர் நீளத்தில் எட்டு பில்லர்களுடன், புதிய மேம்பால பணிகள் குறித்து திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.