/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் இருந்த ரயில்வே மேம்பால அணுகுசாலைக்கு...விமோசனம்!:ரூ.59 கோடியில் விரைவில் கட்டுமான பணிகள் துவக்கம்
/
கிடப்பில் இருந்த ரயில்வே மேம்பால அணுகுசாலைக்கு...விமோசனம்!:ரூ.59 கோடியில் விரைவில் கட்டுமான பணிகள் துவக்கம்
கிடப்பில் இருந்த ரயில்வே மேம்பால அணுகுசாலைக்கு...விமோசனம்!:ரூ.59 கோடியில் விரைவில் கட்டுமான பணிகள் துவக்கம்
கிடப்பில் இருந்த ரயில்வே மேம்பால அணுகுசாலைக்கு...விமோசனம்!:ரூ.59 கோடியில் விரைவில் கட்டுமான பணிகள் துவக்கம்
ADDED : மார் 20, 2024 09:20 PM

பொன்னேரி:பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்திற்கு, அணுகு சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், 59.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட உள்ளதால், அதற்கு விமோசனம் கிடைத்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பெரியகாவணம் பகுதியில், எல்.சி., 26 எண் கொண்ட ரயில்வே கேட் உள்ளது.
புதுவாயல் - சின்னகாவணம் மாநில நெடுஞ்சாலையில் இந்த ரயில்வே கேட் அமைந்துள்ளது. புதுவாயல், ஏலியம்பேடு, பெரியகாவணம், குண்ணம்மஞ்சேரி பகுதிகளை சேர்ந்தவர்கள், பொன்னேரி மற்றும் பழவேற்காடு செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர் ரயில் போக்குவரத்தால், ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், திறந்து மூடும் ரயில்வே கேட்களை நிரந்தரமாக மூடும் வகையிலும், அங்கு, 2022ல் ரயில்வே நிர்வாகத்தின் வாயிலாக மேம்பாலம் கட்டப்பட்டது. இருபுறமும் அணுகு சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்வதற்காக, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் இடையே சென்னை எல்லை சாலை திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. துறைமுகங்களுக்காக புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, மாநில நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது, புறவழிச்சாலைகள் ஏற்படுத்துவது, மேம்பாலங்கள் அமைப்பது ஆகிய பணிகளில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பொன்னேரி அடுத்த புதுவாயல் - சின்னகாவணம் இடையே உள்ள மாநில நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்படுகிறது.
இது சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, பொன்னேரி -- பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில், 4.2 கி.மீ., தொலைவிற்கு, 45 கோடி ரூபாயில் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.
அதே சமயம், இச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கான அணுகுசாலை பணிகள் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ரயில்வே பாலத்திற்கு அணுகுசாலை அமைப்பதற்காக, தமிழக அரசு 59.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக கடந்த மாதம் ஒப்பந்தம் விடப்பட்டது.
இதையடுத்து, தற்போது அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனம் தயாராகி வருகிறது. கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டு வருவது, அளவீடு செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது,
இந்த அணுகு சாலையானது, 31.5 மீ., அகலத்திலும், இருபுறமும், 948 மீ., நீளத்திலும் அமைகிறது. பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனிப்பாதை, மழைநீர் செல்வதற்கு கால்வாய் உள்ளிட்டவைகளும் அமைய உள்ளன.
ரயில்வே மேம்பாலம் அமைந்து, அணுகு சாலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் அதற்கு விமோசனம் கிடைத்து உள்ளது.
புதுவாயல் - காட்டுப்பள்ளி இடையே புதிய சாலை அமைப்பதற்காகவே இச்சாலை மற்றும் ரயில்வே மேம்பால பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விரைவில், இதற்கான திட்டமும் நடைமுறைப்படுத்த உள்ளதால், ரயில்வே மேம்பால பணிகளை துரிதமாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

