/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திர காடுகளின் மழைநீர் கடலில் கலந்து...4 டி.எம்.சி., வீண்!: மாநெல்லுார் ஏரியை நீர்தேக்கமாக மாற்றலாம்
/
ஆந்திர காடுகளின் மழைநீர் கடலில் கலந்து...4 டி.எம்.சி., வீண்!: மாநெல்லுார் ஏரியை நீர்தேக்கமாக மாற்றலாம்
ஆந்திர காடுகளின் மழைநீர் கடலில் கலந்து...4 டி.எம்.சி., வீண்!: மாநெல்லுார் ஏரியை நீர்தேக்கமாக மாற்றலாம்
ஆந்திர காடுகளின் மழைநீர் கடலில் கலந்து...4 டி.எம்.சி., வீண்!: மாநெல்லுார் ஏரியை நீர்தேக்கமாக மாற்றலாம்
ADDED : அக் 09, 2024 01:11 AM

கும்மிடிப்பூண்டி,:ஆந்திர மாநிலம் சத்தியவேடு மலை காடுகளில் இருந்து தமிழக எல்லையில் உள்ள மாநெல்லுார் ஏரியை வந்தடையும் மழைநீர், உபரி நீர் கால்வாய் வழியாக சென்று ஆண்டு தோறும், நான்கு டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலக்கிறது. மாநெல்லுார் ஏரியை நீர்தேக்கமாக மாற்றினால், மழைநீரை சேமிக்கலாம்.
ஆந்திர மாநிலம் சத்தியவேடு மலை காடுகளில் இருந்து மழைக்காலங்களில், கிழக்கு பகுதியை நோக்கி வரும் மழைநீர், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தமிழகத்திற்கு உட்பட்ட மாநெல்லுார் பெரிய ஏரியை வந்தடைகிறது.
அதன்பின் சாணாபுத்துார், எளாவூர் ஏழு கிணறு பாலம் வழியாக 9 கி.மீ., கால்வாயை கடந்து பழவேற்காடு ஏரி வழியாக வங்க கடலில் கலக்கிறது. இடைப்பட்ட கால்வாயில் ஒரு தடுப்பணை கூட இல்லை. ஒவ்வொரு ஆண்டு மழைக்காலங்களில், குறைந்தது 4 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள மிக பெரிய ஏரிகளில் ஒன்றான மாநெல்லுார் ஏரி, 296 ஏக்கர் பரப்பளவு நீர் பிடிப்பு கொண்ட ஏரியாகும். நீளர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மாநெல்லுார் ஏரி, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பி வழிந்து கால்வாய் வழியாக கடலில் கலக்கும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, இரு தினங்கள் மழை பெய்தால் கூட, ஏரி நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. ஏரியின் பல பகுதியில் திட்டு திட்டாக மணல் மண்டி கிடப்பதால், ஏரியன் பல பகுதிகள் நில பரப்பு போல் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில், கும்மிடிப்பூண்டி, தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகங்களை தொடர்ந்து, மாநெல்லுார் சிப்காட் வளாகம் துவங்கப்பட இருக்கிறது. அதற்காக மாநெல்லுார், வாணியமல்லி, மாதர்பாக்கம், சாணாபுதுார், சூரப்பூண்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 2, 000 ஏக்கர் அரசுபுறம்போக்கு நிலங்கள் உட்பட, 4,385 ஏக்கர் பரப்பளவு நிலங்கள், மூன்று கட்டங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநெல்லுார் சிப்காட் துவங்கும் பட்சத்தில், தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கும். மேலும், கிராம மக்கள், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கும் நிலை ஏற்படும்.
மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி நீர்தேக்கமாக மாற்றி தண்ணீரை சேமிக்கும் பட்சத்தில், வீணாக கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆண்டு தோறும் நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்க வழி வகுக்கும். அதன் வாயிலாக தொழிற்சாலைகள், பொதுமக்கள், கால்நடைகள், விவசாயிகள் பயன் பெற வழிவகை செய்யும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‛மாநெல்லுார் ஏரியை நீர்தேக்கமாக மாற்றும் திட்டம் குறித்து அரசு கருத்துரு கேட்கும் பட்சத்தில் திட்ட வரைவு தயாரித்து அனுப்ப தயாராக இருக்கிறோம்' என்றார்.
மாநெல்லுார் சிப்காட் திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவர். மாநெல்லுார் ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி நீர்தேக்கமாக மாற்றினால் அனைவரும் பயன் பெற வழி வகுக்கும்.
-ஜி.சுப்பிரமணி
மாநெல்லுார்.