/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரம் நெற்குன்றத்தில் ரேஷன் கடை கட்டடம் சேதம்
/
சோழவரம் நெற்குன்றத்தில் ரேஷன் கடை கட்டடம் சேதம்
ADDED : நவ 27, 2024 01:34 AM

சோழவரம்:சோழவரம் ஒன்றியம், நெற்குன்றம் கிராமத்தில், அழிஞ்சிவாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடை உள்ளது.
இந்த கடையின் கட்டடம், 30ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். தொடர் பராமரிப்பு இல்லாத நிலையில் கட்டடம் பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன.
மழைக்காலங்களில், மழைநீர் உள்புகுந்து உணவுப் பொருட்களும் வீணாகின. கட்டடம் சேதம் அடைந்து இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின்பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது குறித்து, கடந்த, மே மாதம் நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அங்கு வந்த அதிகாரிகள் உடனடியாக ரேஷன் கடையை வேறு பகுதிக்கு மாற்ற உத்தரவிட்டனர். அதையடுத்து அதே கிராமத்தில் வாடகை கட்டடத்திற்கு ரேஷன் கடை மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பழுதடைந்த கட்டடம் இடித்து அகற்றப்படாமல் இருக் கிறது. இந்த கட்டடத்தை ஒட்டி, அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அங்குள்ள குழந்தைகள் கட்டடத்தின் அருகில் வந்து செல்கின்றனர்.
பழுதடைந்த கட்டடத்தில் இருந்து அவ்வப்போது சிமென்ட் பூச்சுகள் கொட்டுகிறது. கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அங்கன்வாடி மைய குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிஉள்ளது.
மேலும், இதே வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு துவக்கப்பள்ளியும் செயல்படுகிறது.
அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேதம் அடைந்த ரேஷன் கடை கட்டடத்தை இடித்துவிட்டு, புதியது கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.