/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரி முருகன் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்
/
சிறுவாபுரி முருகன் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்
சிறுவாபுரி முருகன் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்
சிறுவாபுரி முருகன் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்
ADDED : ஆக 08, 2025 02:26 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சிறுவாபுரி முருகன் கோவில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில், பிரசித்திபெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது.
இங்கு, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கிறது.
பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, ஹிந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டு வருகிறது.
இந்த கோவிலின் அன்னதான மண்டபத்திற்கு அருகில் உள்ள இடத்தை, தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, குடியிருப்புகளை கட்டி வசித்து வந்தனர். பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு அடிப்டை வசதிகளை மேம்படுத்த, மேற்கண்ட இடம் தேவைப்பட்டது.
இதற்காக, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. அதனால், ஆக்கிரமிப்பாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம், கோவில் நிர்வாகத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது. மேற்கண்ட கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றவும் உத்தரவிட்டது.
அதையடுத்து, நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவில் நிலத்தில் இருந்த குடியிருப்புகள் மற்றும் பிற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றன.
குடியிருப்புவாசிகள், தங்களது வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்த நிலையில், பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த வீடுகள் இடிக்கப்பட்டதை கண்டு, அதில் வசித்தவர்கள் வேதனை அடைந்தனர்.
உரிய இழப்பீடும், மாற்று இடமும் தரவேண்டும் என, அவர்கள் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

