/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூர் ஏரியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
/
மணவூர் ஏரியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : பிப் 15, 2024 02:24 AM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ஊராட்சிக்கு உட்பட்டது, மணவூர் பெரிய ஏரி. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 300 ஏக்கர் பரப்பளவு உடையது.
இந்த ஏரி வாயிலாக, காபூல் கண்டிகை, மணவூர், ராஜபத்மாபுரம், குப்பம்கண்டிகை, மருதவல்லிபுரம், ராஜரத்தினாபுரம் உட்பட ஆறு கிராமங்களில், 2,295 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இக்கிராமங்களில் 1,000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்த ஏரி நீரை நம்பி இரண்டு போகம் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஏரியை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மணவூரை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
ஆறு கிராமங்களுக்கு பாசனமான இந்த ஏரி, 20 ஆண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டது. அதன்பின், துார்வாரப்படாததால் கொசஸ்தலையாற்று கால்வாய், பெரியகளக்காட்டூர் ஏரி கால்வாய் உள்ளிட்டவை துார்ந்து போய் நீர்வரத்து குறைந்தது.
தற்போது ஏரி துார்வாரப்படாததால், கோடை துவங்கும் முன்பே, நீர் குறையும் அபாய நிலை உள்ளது. இதனால், இரண்டாம் போகத்தின் அறுவடை காலத்தில் நீரின்றி அவதிப்படும் நிலை ஏற்படும். எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியை துார்வாரி, கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

