/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அவுரிவாக்கம் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
அவுரிவாக்கம் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 15, 2025 11:39 PM

பொன்னேரி,
பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் பகுதியில் இருந்து, தொட்டிமேடு வழியாக அவுரிவாக்கம் மேல்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலை முழுதும், சரளைக்கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த சாலை புதுப்பிக்கப்படாமல் இருப்பதால், கிராமவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர்.
சாலை சேதமடைந்து இருப்பதால், கிராமவாசிகள், சிறுளப்பாக்கம் கிராமம் வழியாக, 3 கி.மீ., சுற்றிக்கொண்டு பயணிக்கின்றனர்.
இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
எங்கள் கிராமத்திற்கு பொங்கல் விழாவில் பங்கேற்க தமிழக கவர்னர் வந்திருந்தார். அவர் வருகையை ஓட்டி இந்த சாலை சீரமைப்பார்கள் என எதிர்பார்த்தோம்.
ஆனால், சிறுளப்பாக்கம் வழியாக சுற்றிக் கொண்டு அழைத்து வந்தனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வரத் தயங்குகின்றன. கடைக்கோடி கிராமமாக இது உள்ளதால் யாரும் கண்டு கொள்வதில்லை. மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் இந்த சாலையை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.