/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எரியாத மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை
/
எரியாத மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2025 02:06 AM
பொன்னேரி:தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், பழுதாகி கிடக்கும் உயர்கோபுர மின்விளக்குளை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், சிங்கிலிமேடு பனியாத்தம்மன்கோவில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெண்கள் பள்ளி அருகில், திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் ஆலயம், ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் பழுதாகி கிடக்கின்றன.
இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் இருண்டு கிடப்பதால், குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
மேற்கண்ட உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்கக்கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
அதில், 'முக்கிய சாலைகள் இருள் சூழ்ந்து இருப்பதால், பல்வேறு பணிகளுக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகளும் பழுதடைந்து உள்ளன.
'மக்கள் பயன்பெறும் வகையில், உயர்கோபுர மின்விளக்குகளையும், தெருவிளக்குகளையும் சீரமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உள்ளது.
குடியிருப்புவாசிகளிடம் கையெழுத்து பெற்ற பின், ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் அதை அளிக்க உள்ளது.