/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் கட்ட...ரூ.24 கோடி!:வரும் கல்வியாண்டில் பயன்பாட்டிற்கு விட திட்டம்
/
அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் கட்ட...ரூ.24 கோடி!:வரும் கல்வியாண்டில் பயன்பாட்டிற்கு விட திட்டம்
அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் கட்ட...ரூ.24 கோடி!:வரும் கல்வியாண்டில் பயன்பாட்டிற்கு விட திட்டம்
அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் கட்ட...ரூ.24 கோடி!:வரும் கல்வியாண்டில் பயன்பாட்டிற்கு விட திட்டம்
ADDED : நவ 20, 2024 01:57 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், எட்டு ஒன்றியத்தில், 10 அரசு பள்ளிகளில், மாணவர்களின் வசதிக்காக, 97 கூடுதல் வகுப்பறைகள், இரண்டு ஆய்வகங்கள் கட்ட, நபார்டு வங்கி மற்றும் தமிழக அரசு இணைந்து, 24 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து, நேற்று 'டெண்டர்' விடப்பட்டது. இப்பணிகள் வரும் கல்வியாண்டில் பயன்பாட்டிற்கு விட பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலகத்தில், 130 அரசு உயர்நிலை, 119 அரசு மேல்நிலை என, மொத்தம் 249 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 110 முதல், அதிகபட்சமாக 2,700 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை.
மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறை, சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், மாணவர்கள் கல்வி கற்பதற்கு கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, மாணவர்களுக்கு வகுப்பறை மற்றும் ஆய்வகம் இல்லை.
இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறையும், நபார்டு வங்கியும் இணைந்து, பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் 2024 - 25ன் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக, 8 ஒன்றியங்களில், 10 பள்ளிகளில், 97 கூடுதல் வகுப்பறைகள், இரண்டு ஆய்வகங்கள் கட்ட, 24.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வகுப்பறை, ஆய்வகம் கட்டுவதால், 12,154 மாணவர்கள் பயன்பெறுவர். இப்பணிகளுக்கு, சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் முன்னிலையில் நேற்று டெண்டர் விடப்பட்டது.
தற்போது, பழுதடைந்த பள்ளி கட்டடம், வகுப்பறைகளை இடிக்கும் பணி மற்றும் வகுப்பறைகள் கட்டும் இடத்தில் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
இப்பணிகள், வரும் கல்வியாண்டிற்குள் முழுமையாக முடித்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு துறை அதிகாரி கூறியதாவது:
மாவட்டத்தில், ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி, ஒன்பது மேல்நிலைப் பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் கட்டப்படவுள்ளன.
ஒரு வகுப்பறைக்கு, 23.56 லட்சம் ரூபாய் மற்றும் ஆய்வகத்திற்கு 61.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட உள்ளது. ஆறு வகுப்பறை கட்டடத்திற்கு ஏழு மாதமும், 10 வகுப்பறை கட்டடத்திற்கு ஒன்பது மாதமும், 16 வகுப்பறை கட்டடத்திற்கு ஓராண்டும் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
சோழவரம், பாண்டியநல்லுார், அய்யப்பாக்கம் ஆகிய மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகள் தவிர, மீதமுள்ள பள்ளிகளில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்டி முடித்து, வரும் கல்வியாண்டிற்குள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.