/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல் அரிப்பால் பழவேற்காடு கிராமங்களுக்கு...அச்சுறுத்தல்!
/
கடல் அரிப்பால் பழவேற்காடு கிராமங்களுக்கு...அச்சுறுத்தல்!
கடல் அரிப்பால் பழவேற்காடு கிராமங்களுக்கு...அச்சுறுத்தல்!
கடல் அரிப்பால் பழவேற்காடு கிராமங்களுக்கு...அச்சுறுத்தல்!
ADDED : ஜன 10, 2025 01:57 AM

பழவேற்காடு, பழவேற்காடில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடல் அரிப்பால், கடலுக்கும், கடற்கரையோர கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து, பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. கிராமங்கள் கடலுக்கு இறையாகும் முன், தேவையான இடங்களில், பாதுகாப்பு அரண்களை உருவாக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப் பகுதியில், 35 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் வங்காள விரிகுடா கடற்கரை பகுதியையொட்டி, கூனங்குப்பம் கிராமத்தில் துவங்கி, லைட்அவுஸ் நடுகுப்பம், அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரைகுப்பம், காட்டுப்பள்ளி வரை, 15 கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், கடலில் மீன்பிடி தொழில் செய்வதே ஆகும். புயல் காலங்களில் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். அச்சமயங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரைக்கும், மீனவ கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி குறுகும். இதனால் கடல் நீர், குடியிருப்புகள் வரை வந்து செல்லும்.
இந்நிலையில், சமீப காலமாக புயல் அல்லாத நேரங்களிலும், பழவேற்காடு கடற்கரை பகுதிகளில், கடல் அலைகள் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதால், கடல் அரிப்பும் அதிகமாக இருக்கிறது.
கடல் அரிப்பால் கூனங்குப்பம் தொடங்கி, கோரைகுப்பம் வரை உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கடலுக்கும், மீனவ கிராமங்களுக்குமான இடைவெளி, 50 - 100 மீ. அளவில் இருக்கிறது. தொடரும் கடல் அரிப்பால், கடற்கரையோர கிராமங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, கோரைகுப்பம் மீனவ கிராமம் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையில் இருக்கிறது. சுனாமியின் போது பாதிப்பிற்கு உள்ளான கிராமங்களில் கோரைகுப்பம் மீனவ கிராமமும் ஒன்றாகும்.
இருபது ஆண்டுகள் முடிந்து, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. புயல் காலங்களில் அதிக பாதிப்புகளை சந்திக்கும் கிராமமாகவும் இது இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காளஞ்சி கிராமத்தில், கடல் அரிப்பால் அங்குள்ள சாலையே கடல்நீரில் அடித்து செல்லப்பட்டது.
இது போன்று ஒவ்வொரு கடற்கரையோர மீனவ கிராமங்களும் கடல் அரிப்பால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.
இதே நிலை தொடர்ந்தால், மீனவ கிராமங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. கடல் அரிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
கடல் அரிப்பால், பாதிப்பிற்கு உள்ளாகி வரும் மீனவ கிராமங்களை பாதுகாக்கும் வகையில், கடற்கரையோரங்களில் துாண்டில் வளைவு, நட்சத்திர கற்கள் பதித்து பாதுகாப்பு அரண்களை உருவாக்க வேண்டும். இதனால், கடல் அலைகளின் தாக்கம் குறைந்து, பாதிப்புகளை தடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடற்கரை பகுதிகளில் பாறைகற்கள் உள்ளிட்ட எந்தவொரு கடினமான பொருட்களையும் கொட்டக்கூடாது என, 2023ல், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
அதனால், துாண்டில் வளைவுகளுக்கு சாத்தியம் இல்லை. கடல் அரிப்பை தடுப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, கடல் அரிப்பு, சுனாமி போன்றவற்றை தடுக்கும் வகையில், கடற்கரை பகுதிகளில், பசுமையான தடுப்பு கட்டமைப்பை உருவாக்குவதுதான் இதன் நோக்கமாகும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மாற்று தடுப்பு அரண்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பழவேற்காடு பகுதியில் கடற்கரையோர மீனவ கிராமங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அவர்கள் அச்சம் அடைய தேவையில்லை. அது தொடர்பாக அவர்களிடம் இருந்தும் எந்த புகாரும் எழவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

