/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி தாமரை ஏரியில் நிரம்பி வழியும் கழிவுநீர்...குப்பைமயம்!: அடுத்தடுத்த ஏரிகளும் நாசமாவதால் அதிருப்தி
/
கும்மிடி தாமரை ஏரியில் நிரம்பி வழியும் கழிவுநீர்...குப்பைமயம்!: அடுத்தடுத்த ஏரிகளும் நாசமாவதால் அதிருப்தி
கும்மிடி தாமரை ஏரியில் நிரம்பி வழியும் கழிவுநீர்...குப்பைமயம்!: அடுத்தடுத்த ஏரிகளும் நாசமாவதால் அதிருப்தி
கும்மிடி தாமரை ஏரியில் நிரம்பி வழியும் கழிவுநீர்...குப்பைமயம்!: அடுத்தடுத்த ஏரிகளும் நாசமாவதால் அதிருப்தி
ADDED : நவ 14, 2024 02:05 AM

கும்மிடிப்பூண்டி:தொழிற்சாலைகளின் கழிவுநீர், டேங்கர் லாரி கழிவுநீர், குடியிருப்பு மற்றும் உணவகங்களின் கழிவுநீர், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து, ஏரி முழுதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழையால், தாமரை ஏரியின் கழிவுநீர் தற்போது நிரம்பி வழிந்து, அதன் கீழ் அடுத்தடுத்து உள்ள ஏரிகளும் மாசடையும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீராதாரமான, 48 ஏக்கர் பரப்பளவு உடைய தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. கும்மிடிப்பூண்டி நகரின் நிலத்தடி நீரின் தரத்தை வெகுவாக பாதிக்கும் வகையில், தற்போது தாமரை ஏரி, கழிவுநீர் ஏரியாக மாறியுள்ளது.
இதற்கு முன், 2017ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இளைஞர் அமைப்பு, கருவேல மரங்கள், முட்புதர்கள், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், ஆகாய தாமரைகளை அகற்றினர்.
அப்போது, ஏரி புத்துயிர் பெற்றது. அதன்பின், கலெக்டர் உத்தரவின்படி, 2019 ஆகஸ்ட் மாத இறுதியில், ஏரிக்கரை ஓரம் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. அதன்பின் ஏரியை, அரசு முறையாக பாதுகாக்கும் என, எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
மூன்று ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில், படிப்படியாக ஏரி மாசடைந்து, தற்போது சீரழியும் நிலையில் உள்ளது. ஏரியை சுற்றியுள்ள திருவள்ளூர் நகர், அருண் நகர் குடியிருப்புகள், ஜி.என்.டி., சாலையோர உணவகங்கள், விடுதிகளின் கழிவுநீர் ஏரியில் திறந்து விடப்படுகிறது.
இந்த அத்துமீறல்கள் 30 சதவீதம் என்றால், மீதமுள்ள 70 சதவீத அத்துமீறல்கள், தேசிய நெடுஞ்சாலையோர மழைநீர் கால்வாய் வாயிலாக நடக்கிறது.
கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோர மழைநீர் கால்வாயின் நீர்வரத்து, தாமரை ஏரியில் கலக்கிறது.
அந்த மழைநீர் கால்வாயில், சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது.
தாமரை ஏரியில் கழிவுகளும், கழிவுநீரும் சூழ்ந்தததால், ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளன. தாமரை ஏரி மாசடைந்ததை உறுதி செய்யும் விதமாக, 2023 மே மாத துவக்கத்தில், ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
இந்நிலையில், இரு நாட்களாக பெய்த மழையில், தாமரை ஏரியில் தேங்கியிருக்கும் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. நிரம்பி வழியும் பகுதியில், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
அவை, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோர கால்வாய் வழியாக, அடுத்தடுத்து உள்ள சோழியம்பாக்கம், அயநல்லுார் ஏரிகள் வழியாக பழவேற்காடு ஏரியில் கலக்கிறது. இதனால், அந்த ஏரிகளும் மாசடையும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.
தாமரை ஏரியை காக்க தவறிய அரசு துறைகள் மீது சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நீர்வளத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
மேலும், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
தாமரை ஏரியை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் கழிவுநீர் கலப்பிற்கு தீர்வு காணப்படும்.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்,
கும்மிடிப்பூண்டி.
கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியை புதுப்பிக்கும் பணிக்காக, 32 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்து அனுப்பியுள்ளோம். ஒப்புதல் பெற்றதும் தாமரை ஏரி புத்துயிர் பெறும்.
- நீர்வளத் துறை பொறியாளர்,
கும்மிடிப்பூண்டி.